அரச எம்.பி.க்கள் பெற்றுள்ள பட்டங்கள் உண்மையானவையா?

சபாநாயகரின் கலாநிதிப்பட்டம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் மற்றும் மற்றுமொரு அமைச்சரின் பொறியியற் பட்டம் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணையை சமர்ப்பிக்க முன்வந்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு சபாநாயகரிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்தோ ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் கிடைக்காததால், உரிய தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும் புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது
![]()