சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது, “உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே  வேண்டும்.” – என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட  இந்தப் போராட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

“கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா?, பிள்ளைகளைத் தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம், ஓ.என்.பி. ஒரு கண்துடைப்பு நாடகம், கொடுப்பனவுகளைக் கொடுப்போம் என்று செல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படிக் காணாமல் ஆக்கப்பட்டார்கள்?, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழ் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?, எங்கே எங்கே உறவுகள் எங்கே?, சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்” – என்று கண்ணீர்மல்கக் கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button