தேர்தல் களம்

முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி..!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு  (30) நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களிடம் உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை நாளையதினம் ஆரம்பமாகவுள்ள தபால் மூலவாக்களிப்பில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலே 113 அரச நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடைபெறவுள்ளது.

நாளையதினம் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கையானது மாவட்ட செயலகத்திலும் பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெறவிருக்கின்றது.

எதிர்வரும் 1 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து அரச நிறுவனங்களிலும் இடம்பெறவிருக்கின்றது.

அதேபோல் முதலாவது வாக்களிப்பில் பங்குபற்றாதவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி அவர்களுக்கு அரச நிறுவனங்களில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதேபோல் இந்த இரு வாக்களிப்பிலும் பங்கேற்காதவர்கள் எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகத்தில் இருக்கின்ற தேர்தல் காரியாலயத்திற்கு வருகை தந்து வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

அதேவேளை இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்கெண்ணும் பணிக்காக முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் 8 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதியாகவும் அமைதியாகவும் தேர்தல் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *