இந்தியாவுக்கு எதிரான உறுதியான ஆதாரம் இல்லை; கனேடிய பிரதமர்!

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். புதன்கிழமை (16) ஒட்டாவாவில் உள்ள மத்திய தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போது ட்ரூடா இதனை வெளிப்படுத்தினார்.

நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான உளவுத்தகவலை மட்டுமே இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம். இந்தியாவின் தொடர்பிற்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது. மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள், இந்தியாவிற்கு பகிரப்பட்டு, அந்த விவரங்கள் குற்றவியல் கும்பல்களுக்கு செல்கிறது.

இது கனடா நாட்டவர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் இதன்போது அவர் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.கனடாவில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் உறுப்பினர்களைக் குறிவைத்து, இந்திய தூதர்கள் தகவல்களைச் சேகரிப்பதிலும், குற்றக் கும்பலைப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பின்னர் கனேடிய பிரதமரின் இந்த கருத்து வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *