முக்கிய தேர்தலுக்குத் தயாராகும் நிலையில் மீண்டும் சர்வதேச பிடிக்குள் இலங்கை: மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கின் இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று வெளியானது.

இதேவேளை, இலங்கை புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையின் செம்மையாக்கப்படாத வரைவே நேற்று வெளியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் பதிலளிப்பின் அடிப்படையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டதன் பின்னர் முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ள இலங்கை, அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு முறையைச் சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் அதனை இன்னும் செய்யாமல் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, 2023ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்ட மூலங்கள் பாதுகாப்புப் படைகளுக்குப் பல அதிகாரங்களை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளை இலங்கை அரசு விரிவுபடுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதன் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும், ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்பன தொடர்பாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை ஒரு முக்கிய தேர்தலுக்குத் தயாராகி வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு நிலை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button