வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள்: தடுக்க ஐ.நா கூறும் வழிமுறை

கடுமையான வெப்பத் தாக்கத்தால் இந்தியாவில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக அளவில் கடுமையான வெப்பம் பதிவான 10 இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் கரு என்னும் ஊர் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் நடுப்பகுதி வரை 40,000 பேர் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தீவிர வெப்பத்தின் விளைவுகளைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புகளைத் தவிர்க்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோடைக் காலத்தில், இந்தியாவில் குறிப்பாக கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை எட்டியிருந்தது.

கடுமையான வெப்பத் தாக்கம் ஓர் இயற்கைப் பேரிடர் அல்லது பேரிடராகவோ மதிப்பிடப்படவில்லை என்று புவி, அறிவியல் அமைச்சு அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐநாவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கடுமையான வெப்பத் தாக்கத்தால் 2000 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் ஆண்டுதோறும் 400,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்றும், அவற்றில் 45% உயிரிழப்புகள் ஆசிய நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. “தீவிர வானிலை தொடர்பான அனைத்து உயிரிழப்புகளுக்கு தீவிர வெப்பமே முக்கிய காரணம்,” என்று அது கூறியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *