டச்சு வீரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆறு கலைப்பொருட்கள்: இலங்கைக்கு வழங்கப்பட்டதையடுத்து அறிவூட்டல் கண்காட்சி
அருங்காட்சியகங்களில் உள்ள மீளக் கையளிக்கப்பட்ட கலை பொருட்கள் குறித்த அறிவூட்டும் பொதுநிகழ்வு மற்றும் கண்காட்சி இன்று (27 ) கொழும்பு சிட்டி சென்டர் வரவேற்பு முற்றத்தில் காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செதர்லாந்தின் அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பிய ஆறு கலைப்பொருட்கள் பற்றிய தகவல்கள், மீளக் கையளித்தல் பற்றிய விளக்கங்கள் காணொளிகள் மற்றும் சிறுவர் வண்ணம் தீட்டும் பகுதி ஆகியவை அடங்கும்.
கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 2023இல், 1795ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிள் கண்டியிலிருந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஆறு கலைபொருட்களை நெதர்லாந்து அரசு இலங்கைக்கு திருப்பி வழங்கியிருந்தது.
வெல்கே பீரங்கி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அலங்கரிக்கப்பட்ட பீரங்கி மற்றும் அதன் வண்டி, தங்க வாள், வெள்ளிவாள், தங்க கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகியவை இலங்கையிடம் மீள கையளிக்கப்பட்ட பொருட்கள் ஆகும்.
இவை இப்போது கொழும்பு அருங்காட்சியகத்தின் முன் காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, மேற்குறித்த ஆறு கலைப்பொருட்களை திரும்பப் பெறுவதை ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தி, மீளக் கையளித்தல் என்ற தலைப்பில் பொதுமக்களுடன் ஈடுபடுவதற்காக எங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடரின் ஒரு பகுதியாகும்.
இக்கண்காட்சி நிகழ்வானது, முற்றிலும் இலவசமாக இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். ஆகவே பொதுமக்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()