தென் கொரிய எல்லையை பிரிக்க கட்டமைக்கப்படும் பிரம்மாண்ட சுவர்; போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
தென் கொரியாவுடனான எல்லையை பிரிக்க பிரம்மாண்ட சுவர் கட்டப்பட்டு வருவதாக வடகொரியா அருகே புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எல்லைக்கு அருகில் சுவர் கட்டப்பட்டு வரும் பகுதிகள் புகைப்படங்களில் தெளிவாகத் தெரிவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே நீண்ட கால போர் நிறுத்தம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டுமானம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள DMZ அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இரு நாடுகளுக்குமிடையிலான செயற்பாடுகள் அசாதாரண தன்மையானவையாக கருதப்படுவதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்தப் பின்னணியிலேயே இந்த சுவர் கட்டப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வடகொரியா எல்லையில் இராணுவ பலத்தை பலப்படுத்த முயற்சிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இராணுவமயமாக்கப்பட்ட வலயத்தின் வட கொரியப் பகுதியில் நிலம் சுத்தப்படுத்தப்பட்டதற்கான சான்றுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள் படங்களில் புதிதாக கட்டப்பட்ட அணுகல் பாதை காணப்படுகிறது.
இந்த நடவடிக்கை 1953ஆம் ஆண்டில் கொரியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
வடகொரியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயத்தை எழுப்பியுள்ளது.
மேலும் சமீபத்தில் தென் கொரியாவுடனான ஒற்றுமையின் சின்னங்களை வடகொரியா அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
![]()