குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ…. 2 தமிழர்கள் உள்பட 30 இந்தியர்கள் பலி!

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 தமிழர்கள் உள்பட 30 இந்தியர்களுடன் மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குவைத் நேரப்படி காலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் இருந்த மக்கள், தப்பிக்க முயற்சி செய்தனர். சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்தால், 30 இந்தியர்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உயரிழந்த 30 இந்தியர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
தீ விபத்தால் பலர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: குவைத்தில் நிகழ்ந்த தீ விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வருகிறது. நமது தூதர் அங்குள்ள முகாமிற்கு சென்றுள்ளார்; மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எங்களது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக +965-65505246 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.
![]()