குருநகர் சேமக்காலையில் பெண் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை!
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் சவக்காலைக்கு அழைத்து வந்து தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிப் படுகொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45 வயது வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ். குருநகர் கொஞ்சேஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு நேற்றுப் பிற்பகல் அழைத்து வந்தார். அங்கு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் மேற்படி ஆண், பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டினார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்துப் பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அந்தப் பெண் நேற்று இரவு உயிரிழந்தார்.
இரத்தினவடிவேல் பவானி (வயது 45) என்ற பெண்ணே இவ்வாறு சாவடைந்தார்.
சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரைப் பொலிஸார் கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()