நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்
நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருந்து வருகிறது என தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு குழு முயன்று வருகிறது. ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றங்களுக்கு உள்ளேயும், ஊடகங்களின் வாயிலாகவும் நீதித்துறையை விமர்சித்து வருகின்றனர்.
நீதிபதிகளுக்கு அழுத்தம்
சில குழுக்கள் தங்களது வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட முயற்சிப்பதாகவும், தங்களுக்கு சாதமான தீர்ப்பு வழங்கும்படி நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். நீதித்துறை பற்றிய தவறான தகவல்களை பரப்பி, நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க முயற்சி நடந்து வருகிறது. நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது.
நடவடிக்கை
நமது ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்துகின்றன. அமைதியாக இருப்பது அல்லது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கும். மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கடித்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ஆதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல், பிங்கி ஆனந்த், ஹிதேஷ் ஜெயின், உஜ்வாலா பவார், உதய் ஹொல்லா, உதய் ஹொல்லா உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.