பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்!

கருவுற்று 126 நாட்களில் பிறந்த கனேடிய இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா மற்றும் ஷகினா ராஜேந்திரம்  தம்பதிகளுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளே இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

கரு முழுமையாக முதிர்ச்சி அடையாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக ஏடியா நடராஜாவும் ஏட்ரியல் நடராஜாவும்  இந்த சாதனையை படைத்துள்ளனர்.

குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, 2022 மார்ச் 4-ஆம் திகதி பிறந்தனர். பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும்.

22 வாரங்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே குழந்தைகள் பிறந்திருந்தால், மருத்துவமனையால் உயிர்காக்கும் முயற்சி நடந்திருக்காது என்று கின்னஸ் கூறுகிறது.

ஷகினா கூறுகையில், தனக்கு 21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் பிரசவம் தொடங்கியபோது, ​​குழந்தைகள் காப்பாற்றப்பட சாத்தியம் இல்லை என்றும் “உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 0%” இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

கடுமையான இரத்தப்போக்கு இருந்தபோதும், இன்னும் சில மணி நேரத்திற்கு குழந்தைகளை வயிற்றினுள்ளேயே வைத்திருக்க தம்மாலான முழு முயற்சியை செய்ததாக ஷகினா கூறினார்.

அதனையடுத்து, 22 வாரங்களுக்கு இரண்டு மணி நேரம் பிந்தி குழந்தைகள் தாயின் கருவைவிட்டு வெளியில் வந்தன.

தொடக்கத்தில் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் இருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது அடியா லேலின் மற்றும் அட்ரியல் லூகா நடராஜா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள், சமீபத்தில் தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button