ஒரு ரூபாவும் ஒரு தேங்காயும் போதும் : ரூ.11.50 இலட்சம் வரதட்சணையை திருப்பிக் கொடுத்த இராணுவ வீரர்..!

இந்தியாவில், இராணுவ வீரர் ஒருவர் திருமணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட 1150,000 ரூபாய் வரதட்சணையை ஏற்க மறுத்து, ஒரு ரூபாயையும், ஒரு தேங்காயையும் மட்டுமே பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத். இவர் தனது மகளை இராணுவ வீரர் அமர்சிங் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன.

திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை பிரேம் சிங் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக ரூ. 1150,000 ரூபாவை  ஒரு தட்டில் வைத்து மணமகனிடம் கொடுத்தார். அப்போது மணமகன் அமர்சிங், “நான் வரதட்சணை வாங்கமாட்டேன்” என்று கூறி, அதிலிருந்து ஒரு ரூபாயையும், ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக்கொண்டார்.

மணப்பெண்ணின் தந்தை பிரேம் சிங் ஷெகாவத் கொடுத்த வரதட்சணை பணத்தை மணமகனின் தந்தை பன்வர் சிங் வாங்கி, மீண்டும் மணப்பெண்ணின் தந்தையிடமே கொடுத்தார். அதை, ஆனந்த கண்ணீருடன் அவர் வாங்கிக்கொண்டார்.

1150,000  ரூபாய் வரதட்சணையை மணமகன் திரும்பக் கொடுத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் இராணுவ வீரர் அமர்சிங்கை பாராட்டினர்.

அமர்சிங் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக இராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அமர்சிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் இராணுவ வீரராக இருக்கிறார். அவருடைய தாத்தா இந்தியா – பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button