கைலாசா அதிபர் நித்யானந்தாவுக்கு எதிராக ‘புளூகார்னர்’ நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டதா?

கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button