இலக்கியச்சோலை

ஈழ விடுதலைப் போரில் சொல்லப்படாத பக்கங்ளை கூறும் ‘பயங்கரவாதி’ நாவல் வெளியீடு!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் சொல்லப்படாத பக்கங்ளை சுமந்த  தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா கரைச்சி பிரதேச சபை அரங்கில் இன்று(15) இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச சபை பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பில், யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர், பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தின் இருண்ட காலத்தையும் வன்னியின் ஒளி மிகுந்த காலத்தையும் கொண்ட கதைக்களமும் ஒரு மாணவத் தலைவனின் வீரமும் வேட்கையும் காதலும் பற்றிய கதையுமே ‘பயங்கரவாதி’ நாவல்.

‘பயங்கரவாதி’ என்ற இவரது புதிய நாவல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பின்னணியில் ஒரு மாணவத் தலைவனின் காதலையும் பேராண்மையையும் பற்றிப் பேசுகிறது.

இலங்கை அரசியலிலும் ஈழ விடுதலையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்றும் முக்கியத்துவமான களம். அதிலும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் அக்களம் நெருப்பாலும் குருதியாலும் குளித்திருந்தது.

இவ்வாறான கதைப்பின்னணியை கொண்டே’பயங்கரவாதி’ நாவல் படைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் முதல் பிரதியை நிகழ்வின் பிரதம விருந்தினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வெளியிட, கிளிநொச்சி இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை முதன்மைப் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழங்கி வைக்க விடுதலைப் புலிகளின் மூத்த போராளி பசீர் காக்கா எனப்படும் மு. மனோகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் போராளி வெற்றிச் செல்வியும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரனும் விமர்சன உரையை வழங்கினர். நிகழ்வில் அறிமுகவுரையை செந்தூரனும், வெளியீட்டுரையை பிரதேச சபை உறுப்பினர் அ. சத்தியானந்தனும் வழங்கினர்.

விடுதலைப் போராட்டம் குறித்த பதிவாக பயங்கரவாதி முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்ட பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எக்காலத்திலும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக இந் நாவல் அமையும் என்றும் குறிப்பிட்டார்.

அழகியல், மொழி, படிமம், நாவல் களம் என்பனவற்றில் பயங்கரவாதி தேர்ந்த நாவலாக இருப்பதாகவும் கலைத்திறனிலும் கலை அழகியலிலும் முதிர்ச்சி பெற்ற இந்த நாவல் ஈழ நாவல்களில் தனித்து நிலைத்திருக்கும் என்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் குறிப்பிட்டார்.

இதேவேளை நிகழ்வில் பேசிய போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி, இந்த நாவலில் வரக் கூடிய பாத்திரங்களோடும் களத்தோடும் தானும் வாழ்ந்த ஞாபகங்களை நினைவுபடுத்தியதுடன் தீபச்செல்வனின் கவித்துவமான மொழி பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தீபச்செல்வன் மனிதநேயம் மிக்க தலைசிறந்த படைப்பாளி என்று குறிப்பிட்டதுடன் கொள்கைக்காகவும் இனப்பற்றுக்காகவும் உறுதியோடு பயணிக்கும் தீபச்செல்வன் ஒரு இலக்கியப் போராளி என்றும் புகழராம் சூட்டினார்.

நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய தீபச்செல்வன், மக்கள் இன்று வழங்கியுள்ள மகத்தான வரவேற்பு தனக்கு சிறந்த உற்சாகத்தை தருகிறது என்றும் புகழுக்கும் பணத்திற்குமாக தான் எழுதுவதில்லை என்றும் இன விடுதலைக்கான எழுத்துப் பயணம் தொடரும் என்றும் கூறினார்.

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் தன்னை பயங்கரவாதியாக கூறி இலங்கை இராணுவம் அடக்கி ஒடுக்கிய நினைவுகளை பகிர்ந்ததுடன் அதனை சவாலாகக் கொண்டே அன்று போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் அக் காலத்து பயண நினைவுகள்தான் பயங்கரவாதி நாவலாக உருக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

தீபச்செல்வனின் உணர்வும் ஆழமும் அறிவும் கொண்ட உரைக்கு மக்கள் பெரும் வரவேற்பும் உற்சாகமும் அளித்தனர். நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய ஜனகா நீக்கிலஸ் நன்றியுரையை வழங்க நிகழ்வு நிறைவுபெற்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.