அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரம்: அண்ணாமலை குரலில் ‘மிமிக்ரி’ ஆடியோ
மதுரையில், அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில், ‘அரசியல் செய்வோம்’ எனக் கூறியதாக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை குரலில், ‘மிமிக்ரி’ செய்து வெளியிட்ட ஆடியோ குறித்து, போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம், அக்கட்சி புகார் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன், 24, உடல் ஆக., 13ல் மதுரை விமான நிலையம் வந்தது. இடையூறுஅஞ்சலி செலுத்துவது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், பா.ஜ.,வினருக்கும் கருத்து மோதல் ஏற்படவே, அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டது.
இச்சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு, பா.ஜ., நகர் தலைவராக இருந்த டாக்டர் சரவணன் தி.மு.க.,வில் ஐக்கியமானார்.செருப்பு வீசிய வழக்கில், இதுவரை சரவணன் கைது செய்யப்படாதது ஏன் என, பா.ஜ.,வினர் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையும், மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனும் பேசியது போல், ஆடியோ ஒன்று வெளியானது.
அதில், ‘விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை எப்படி மாஸா, கிராண்டா பண்ணுவது என யோசித்து வருகிறேன். அதை எப்படி அரசியலாக்குவது என சொல்கிறேன்’ என, அண்ணாமலை பேசுவது போல் இருக்கிறது.இதை மறுத்துள்ள அக்கட்சி, அவரது குரலில் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிட்டுள்ளதாக கூறி, மகா சுசீந்திரன், துணைத் தலைவர் ஜெயவேல் தலைமையில், கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.அதில் கூறியுள்ளதாவது: என் மீதும், அண்ணாமலை மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடியோ வெளியிட்டுள்ளனர்.
ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அண்ணாமலையுடன் காரில் சென்றேன். அவரது மொபைல் போனுக்கு, டாக்டர் சரவணன், ‘மிஸ்டு கால்’ கொடுத்தார். அவரை தொடர்பு கொண்டு ‘ஓபன் மைக்’கில் பேசிய போது, அஞ்சலி செலுத்த அமைச்சர் இடையூறு செய்வதாக கூறினார். உண்மைக்கு முரணானதுபிறகு, அஞ்சலி செலுத்த அனுமதி பெற்று விட்டதாக கூறி, விமான நிலையத்திற்கு வரச் சொன்னார்.
அதற்கு அண்ணாமலை, ‘அமைச்சரின் உண்மை தன்மையை மக்களிடம் எடுத்து கூறி, அவரது பொய்யான முகத்திரையை காட்டி, வேறு ‘லெவல்’ அரசியல் பண்ணுவோம்’ என்றார்.அதையும் மீறி சரவணன் வரச் சொன்னதால், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.வெளியே என்ன நடந்தது எனத் தெரியாது. எந்த இடத்திலும், நானும், அண்ணாமலையும் போனில் பேசவில்லை.
அவருடன் சென்று கொண்டிருக்க, போனில் பேசியதாக கூறுவது உண்மைக்கு முரணானது.மேற்படி போன் உரையாடலை திரித்து, ‘கட்டிங்’ செய்தும், டப்பிங், எடிட்டிங் செய்தும் ஆடியோ வெளியிட்டுள்ளனர். சரவணன் போன் எண்ணை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும். அவர் வேண்டுமென்றே சதி செய்து, இந்த ஆடியோவை தன் ஆட்கள் மூலம் வெளியிட்டுள்ளார். அவர் மீதும், ஆடியோ வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
![]()