இன்று எழுத்தாளர் நா. சோமகாந்தன் ( 1934 – 2006 ) நினைவு தினம்!

நினைவுப்பதிகை
அயராமல் இயங்கிய இலக்கிய கலாசார தூதுவர் !!
முருகபூபதி.
யாழ்ப்பாணம் நல்லூரில் 1822 ஆம் ஆண்டு பிறந்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் 150 ஆவது ஜனனதின விழா நிகழ்வுகள் இலங்கையில் பல பாகங்களிலும் 1972 காலப்பகுதியில் நடந்தது.![]()
முற்போக்குச்சிந்தனையுடன் வெளியான மல்லிகை இதழும் ஆறுமுகநாவலரின் படத்தை முகப்பில் பதிவுசெய்து சிறப்பிதழ் வெளியிட்டது.
நாவலரையும் இலங்கை தமிழரசுக்கட்சியினரும் இடதுசாரிகளும் விட்டு வைக்கவில்லை. அவர் இரண்டு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்த பயண இலக்கியவாதியும் அந்த பயணத்தொடருக்காகவே சூட்டிய இதயம் பேசுகிறது என்ற பெயரிலேயே ஆனந்தவிகடன் ஆசிரியப்பொறுப்பிலிருந்து வெளியே வந்ததும் இதழ் நடத்திய மணியனிடம் நாவலரைத் தெரியுமா…? எனக்கேட்டபொழுது, “ தனக்கு நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்“ என்றார்.
இந்த இலட்சணத்தில் அன்று தமிழகத்தின் வணிக இதழியல் துறை இருந்தது. நாவலரை தேசியவிழிப்பின் சின்னம் என முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொண்டாடியது. அதே வேளையில் சமஷ்டி பேசியவர்கள் நாவலரின் சைவசமய
நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை குருபூசைச்சிமிழுக்குள் அடைத்துவிட்டிருந்தனர்.
எமது நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றம் நடத்திய நாவலர் விழாவுக்கு உரையாற்ற வந்த ஆலாலசுந்தரம் எம்.பி. நாவலருக்கு சிறப்பிதழ் வெளியிட்ட மல்லிகையையும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் கடுமையாகச்சாடினார்.
சமஷ்டிக்கட்சியின் தலைவர் செல்வநாயகம் கிறிஸ்தவர். அந்தக்கட்சி நாவலருக்குரிய முக்கியத்துவத்தை வழங்கவில்லை என்ற தொனியில் மல்லிகை ஆசிரியத்தலையங்கம் அமைந்திருப்பதாக ஆலாலசுந்தரம் விஷம் கக்கினார்.
ஆனால், ஜீவா அந்தத்தொனியில் எழுதவில்லை. தமிழ் தமிழ் என்று உணர்ச்சியுடன் பேசுபவர்கள் நாவலரின் 150 ஆவது ஜனன விழாவை கொண்டாட முன்வராமல் பின்னடிக்கிறார்கள் என்றும் ஜீவா எழுதிவிட்டார். இக்கூற்று ஆலாலசுந்தரத்தை உசுப்பிவிட்டது. இத்தனைக்கும் அவர் மல்லிகையை விலை கொடுத்து வாங்கிப்படிக்கவும் இல்லை. மன்றத்தின் நூலகத்திற்கு நான் வழங்கியிருந்த குறிப்பிட்ட மல்லிகை நாவலர் சிறப்பிதழை படித்துவிட்டே சத்தம்போட்டார்.
(தந்தை செல்வா மறைந்தவேளையில் மல்லிகை அவரது படத்தையும் முகப்பில் பதிவுசெய்து ஆசிரியத்தலையங்கம் எழுதியது.)
அதென்ன பின்னடிப்பு…? சட்டைக்கு குத்தும் பின்னையா மல்லிகை ஆசிரியர் சொல்கிறார் எனக்கிண்டலாக வேறு கேள்வி எழுப்பினார் ஆலாலசுந்தரம்.
நாவலர் சாதி பார்த்தாராம் – என்ற விமர்சனமும் இருந்தது. அதே வேளையில் யாழ்ப்பாணத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் நாவலர் கஞ்சித்தொட்டி இயக்கம் நடத்தி பலரதும்
பசிபோக்கிய உத்தமர் – சமூகப்பணியாளர் என்ற கருத்தும் வெளியானது. அப்படியாயின் ஆறுமுகநாவலர் யார்? அவரது உண்மையான சித்திரம் என்ன? அவர் முற்போக்காளரா? அல்லது பிற்போக்காளரா? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அவ்வேளையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாவலர் ஆய்வரங்கொன்றை வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில் ஒரு மாலைவேளையில் ஒழுங்கு செய்திருக்கும் தகவலை நண்பர் மு.கனகராஜன் எனக்குச்சொன்னார். நான் மல்லிகையூடாக அறிமுகமாகியிருந்த காலப்பகுதி அது. குறிப்பிட்ட ஆய்வரங்கைப்பற்றிய செய்திக்கட்டுரையை மல்லிகையில் எழுதுவதற்காக அங்கு சென்றிருந்தேன். சங்கச்செயலாளர் பிரேம்ஜி வரவேற்புரை நிகழ்த்தினார். வேட்டி அணிந்து வந்த பேராசிரியர் கைலாசபதியும் ( அன்றுதான் அவரை முதல் முதலில் வேட்டியுடன் பார்த்தேன். அழகாக இருந்தார்) முகம்மது சமீமும் விரிவான உரையை நிகழ்த்தினார்கள். சபையில் ஈழவேந்தனும் இருந்தார். கைலாசபதி பேசியபொழுது குறுக்கிட்டு வாதம் செய்தார். இவ்வாறு நாவலர் இரண்டு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களுக்கு இலக்கானவர்தான்.
சிறுவயதில் சமயபாடவகுப்பில் நாவலரின் சைவவினா விடையை படித்தபொழுது என்னையும் எனது சக வகுப்பு நண்பர்களையும் சிரிப்பூட்டியவர் இந்த ஆறுமுகநாவலர். காரணம் அவர் காலையில் எந்தத்திசையில் இருந்து மலம் கழிக்கவேண்டும் என்று சொன்னதுதான். வகுப்பில் – பேச்சுப்போட்டிகளில் அவர் சம்பத்தப்பட்ட குருபூசை – விழாக்களில் எல்லாம் எனக்கு சைவவினாவிடைதான் நினைவுக்குவந்து சிரிப்பூட்டும். அந்தளவுக்கு நாவலரைப் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட அறிவிருந்த எனக்கு – புதிய வெளிச்சத்தை தந்தது அந்த ஆய்வரங்கு.
கைலாசபதியும் முகம்மது சமீமும் தத்தமக்கேயுரித்தான கண்ணோட்டங்களுடன் நாவலரைப்பற்றி பேசினார்கள். யாழ்ப்பாணத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலைக் கீறி சோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயற்றில் பசுமாடு உண்ணும் புற்கள் செமிபாடின்றி அப்படியே இருந்ததாக சொன்னார்கள் என்று ஒரு ஆங்கிலேய சமூக ஆய்வாளர் எழுதியிருக்கும் அதிர்ச்சியான தகவலை சமீம் சொன்னார். மாடு மேயும் புல்லை மனிதர்கள் உண்ணும் அளவுக்கு பஞ்சம் தலைவிரித்தாடிய கொடுமையும் துயரமும் கப்பிய காலகட்டத்தில் நாவலரின் கஞ்சித்தொட்டி இயக்கம் விதந்து போற்றுதலுக்குரியது என்றும் சமீம் குறிப்பிட்டார்.
(நாவலர் ஆய்வரங்கு கட்டுரைகள் தனியாகத் தொகுக்கப்பட்டு புதுமை இலக்கியம் இதழும் பின்னர் வெளியானது)
அந்த ஆய்வரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய பிரேம்ஜி நாவலரின் பெயருடன் இன்னும் ஒருவரின் பெயரையும் அடிக்கடி உச்சரித்தார். அந்தப்பெயர் சோமகாந்தன்.
சிரித்த முகம். எவரையும் கவரத்தக்க தோற்றம். சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். எவரும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் கனகராஜன் மூலம் என்னைத்தெரிந்துகொண்டு ( காரணம் அன்று அந்தக்கூட்டத்தில் நானொரு புதுமுகம் அவருக்கு) கூட்டம் முடிந்ததும் அருகே வந்து தோளைத்தொட்டு – ‘ நீர்கொழும்பிலிருந்து வந்திருக்கிறீர். இந்த இரவில் திரும்பி ஊர்போய்ச்சேருவதற்கு பஸ் இருக்குமா?’ என்று வாஞ்சையோடு கேட்டார்.
அக்காலப்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித்திருந்த இந்தப்புதியவ
ன், சந்தித்த வாஞ்சையான மனிதர்களில் ஒருவர் சோமகாந்தன். இறுதியாக 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் அண்டர்சன் தொடர் மாடியில் எனக்கு விடைகொடுத்து -நண்பர் எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் வீட்டுக்கு வழிகாட்டி ஒரு ஓட்டோ வாகனத்தை எனக்காக ஒழுங்கு செய்து வழியனுப்பினார். அதுவே அவருடனான இறுதிச்சந்திப்பு.
அவருடனான முதல் சந்திப்பு எப்படி என்னால் மறக்கமுடியாததோ, அதே போன்றதுதான் அந்த இறுதிச்சந்திப்பும். “ இரத்தினவேலோன் வீட்டுக்குச்சென்றபின்னர் எங்கே போகிறீர்?’- எனக்கேட்டார். “ ஜீவாவிடம் போகிறேன். “ “அப்படியா. எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். மல்லிகை 41 ஆவது ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இதோ படித்துப்பாரும். ஜீவாவிடம் இதனைச்சேர்ப்பித்துவிடுங்கள். “ அவரைப்போலவே அழகான கையெழுத்திலிருந்த அந்தக்கட்டுரையை படித்தேன்.
மல்லிகை ஆசிரியரும் வாசகர்கள் மலரிலும் படிப்பதற்கு முன்பே அதனைப்படித்தவர்கள் இருவர். ஓன்று நான். மற்றவர் அதற்கு முன்னர் அதனைப்படித்த அவரது மனைவியும் அவரது முதல் வாசகியுமான திருமதி பத்மா சோமகாந்தன்.
தேசிய ஒருமைப்பாடு மாநாடு – பாரதி நூற்றாண்டுவிழா – இ.மு.எ.ச. கொழும்புக்கிளை – கொரஸ என்ற தென்னிலங்கை சிங்களக்கிராமத்தில் நடந்த கருத்தரங்கு சங்கத்தின் வெள்ளி விழா கொழும்பில் மாதாந்த கருத்தரங்குகள் – 1986 இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு — இப்படியாக பல்வேறு நிகழ்வுகளில் சோமகாந்தனுடன் இணைந்து வேலை செய்தபோது அவரது ஓய்வற்ற செயல்பாடுகள் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் முன்மாதிரியானதுதான் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
எடுத்த கருமத்தை ஊண் உறக்கம் பாராது செய்து முடிக்கும் திறன் அவர் கைவரப்பெற்றிருந்த கலை. சங்கம் பல சோதனைகளை கடும் விமர்சனங்களை நெருக்கடிகளை
சந்தித்த தருணங்களில் எல்லாம் நிதானமாக அதேசமயம் வேகமாகவும் இயங்கும் ஆற்றல் அவருக்கே உரித்தானதுதான். எப்போதோ எழுதத்தொடங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நாவலர் சபை – இந்து மாமன்றம் உட்பட பல வெகுஜன இயக்கங்களின் வேலைத்திட்டங்களில் அமைப்புச்செயலாளராக அவர் தீவிரமாக இயங்கியதனால் ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு அரிதாகியிருந்தது.
ஒருநாள்,“ஐஸே கணகாலம் சிறுகதை எழுதவில்லை. சிறுகதைகள் படிக்கவும் இல்லை. எனக்கு உம்மிடமிருக்கும் புதிய தொகுதிகளை கொண்டுவந்து தாரும். “ என்றார். நானும் கொடுத்தேன். ஞாபகமாகத் திருப்பித்தந்ததுடன் மீண்டும் சிறுகதைகள் எழுதவும் தொடங்கினார். எவரையும் வெறுக்கத்தெரியாதவர். மற்றவர்கள் வெறுத்தாலும் அதற்காக கோபித்து வெறுக்கத்தெரியாத வர் – ஆனால் எவரேனும் கோபித்து ஒதுங்கிக்கொண்டால் தானும் ஒதுங்கிக்கொள்ளும் சுபாவம் கொண்டவர். சோமகாந்தனின் ஆகுதி கதைத் தொகுதி வெளியீட்டு விழா 1986 இறுதியில் நல்லூரில் நடந்தபோது பிரேம்ஜி – ஜீவா – நந்தி -முருகையன் – மௌனகுரு – சொக்கன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன். பின்னர் கொழும்பு கமலா மோடி மண்டபத்தில் முன்னாள் நீதியரசர் எச்.டபிள்யூ. தம்பையா அவர்களின் தலைமையில் நடந்த அறிமுகவிழாவிலும் உரையாற்றினேன்.
சோமகாந்தன் நீர்கொழும்பைச்சேர்ந்த என்னை மாத்திரம் நேசிக்கவில்லை. திக்குவல்லை – அநுராதபுரம் – புத்தளம் – மினுவாங்கொடை – சிலாபம் – மலையகம் உட்பட அனைத்து தமிழ்ப்பிரதேசங்களையும் சேர்ந்த சகல தமிழ் எழுத்தாளர்களையும் உளமாற நேசித்தவர். அவர் பல மலர்கள் நூல்களின் பதிப்பாசிரியர். தொகுப்பாசிரியர். மல்லிகை ஜீவா – டொக்டர் நந்தி ஆகியோரின் மணி விழா
மலர்த்தொகுப்பு 1998 இல் வெளியான பிரேம்ஜியின் எழுத்துலக பொன்னாண்டு தொகுப்பு நூல் ஆகியனவும் சோமகாந்தனின் முன்முயற்சிகள்தான். இறுதியாக கொழும்பில் அவரது ஆகுதி அறிமுகவிழாவில் விடைபெற்று மீண்டும் பதினொரு வருடங்களின் பின்னர் கொழும்பில் மற்றுமொரு இலக்கியச்சந்திப்பில்தான் அவரைச்சந்தித்தேன். துரைவி பதிப்பகம் நடத்திய துரை விஸ்வநாதனின் ஸ்தாபனத்தின் மேல் மாடியில் தினகரன் ஆசிரியராக பதவியேற்ற ராஜஸ்ரீகாந்தனுக்கும் நீண்ட நாட்களுக்குப்பின்பு இலங்கை திரும்பியிருந்த எனக்கும் வரவேற்புக்கூட்டமும் 1997 டிசம்பர் 6 – 7 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்தவிருந்த இலக்கிய ஆய்வரங்கு தொடர்பான ஆலோசனைச் சந்திப்புமாகவும் அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஆய்வரங்கு மலருக்கு ஒரு கட்டுரை வேண்டுமென்றார் சோமகாந்தன். இன்னும் இரண்டு நாளில் நடக்கவிருக்கும் ஆய்வரங்கில் வெளியிடப்படவுள்ள மலருக்கு கட்டுரை கேட்கிறீர்களே? எப்படி சாத்தியம்? என்றேன். “ உமது கட்டுரை இடம் பெறவேண்டும். உடனே எழுதித்தாரும். “ என்றார். புலப்பெயர்வும் ஒட்டுறவும் என்ற சிறிய கட்டுரையை உடனே எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எனக்குச் சந்தேகம். இடையிலிருந்த குறுகிய கால அவகாசத்தில் எனது கட்டுரையையும் பதிப்பித்து மலரையும் அச்சிட்டுவிடுவாரா…?
என்ன ஆச்சரியம் ! ஆய்வரங்கு தொடங்குவதற்கு முன்பாக அந்தக்காலை வேளையில் இராமகிருஷ்ண மண்டபத்தில் எனது கட்டுரையும் இடம்பெற்ற மலரின் பிரதிகளுடன் சோமகாந்தன்தான் முதலில் தரிசனம் தந்தார்.
இப்படியும் ஒரு அபூர்வமான – இயந்திரமாக இயங்கும் ஒருவரை எனது வாழ்நாளில் இதுவரையில் நான் சந்தித்ததில்லை. ஈடுசெய்யப்படவேண்டிய அவரது ஆசனம் இன்னமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது.
2006 ஏப்ரில் மாதம் எனது மாமனார் ( மனைவியின்அப்பா) மருத்துவர் பஞ்சநாதன் பிலிப்பைன்ஸில் மறைந்ததையடுத்து அங்கு சென்று அவரது இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு சிங்கப்பூர் திரும்பிய சமயம் – அந்த மாதம் 28 ஆம் திகதி சோமகாந்தன் எங்களையெல்லாம் விட்டு மறைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அவரது மகள் கலாஞ்சலியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் சொன்னேன்.
எவருடன் உரையாடும் பொழுதும் தனது நெஞ்சில் அடிக்கொருதரம் கை வைத்தபடி பேசும் சோமகாந்தன். நெஞ்சில் கை வைத்தவாறே போய்விட்டார். “நீங்கள் அனைவரும் எப்பொழுதும் எனது நெஞ்சுக்குள்தான் இருக்கிறீர்கள்” என்பதைத்தான் அடிக்கடி உணர்த்தினாரோ தெரியவில்லை. அந்த அண்டர்ஸன் தொடர் மாடிக்குடியிருப்பிலிருந்து இன்னமும் அவர் மலர்ந்த முகத்துடன் கையசைத்து விடைகொடுத்துக்கொண்டுதானிருக்கிறார் என்ற குருட்டு உணர்வோடுதான் நான் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்றேன்.
அவரைப்பற்றி தமிழ் விக்கிபீடியாவின் பதிவுகள் இதோ: 1991 இ ல் இவரது இலக்கியப் பணியைக் கெளரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்கள் இலக்கியக் குரிசில் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்கள். 1994 இல் இலங்கை கலாச்சார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச்![]()
சமூகத்திற்கும் அவர் வழங்கிய சேவையைப் பாராட்டி ‘தமிழ் ஒளி’ என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது. வெளிவந்த நூல்கள் நிலவோ நெருப்போ ( சிறுகதைத் தொகுதி) விடிவெள்ளி பூத்தது (நாவல் – வரதர் வெளியீடு) ஈழத்து இலக்கிய வரலாறு – பல்துறை நோக்கு (ஆய்வு) பொய்கை மலர் (நாவல்) நிகழ்வுகளும் நினைவுகளும் – காந்தன் கண்ணோட்டம் தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்) ஆகுதி (சிறுகதைத் தொகுதி) ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை? Lanka and Ramayanam Ancient Temples of Shiva in Sri Lanka சோமகாந்தனின் பன்முகப்பணிகளை சித்திரிக்கும் பலரதும் ஆக்கங்களுடன் சோமகாந்தம் என்ற தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.
—0—
![]()