Featureகவிதைகள்

பத்தாவது ஆண்டில் பரிணமிக்கும் அக்கினிக்குஞ்சு!…. சங்கர சுப்பிரமணியன்.

வித்தாக இலக்கிய மண்ணில் விழுந்து
சத்தான ஆளுமைகளால் நன்கு முளைத்து
பத்தாம் ஆண்டில்  தடம்பதித்து வளர்ந்து
முத்தாக  அக்கினிக்குஞ்சாய் பொலிவுற்றாய்

பத்தோடு பதினொன்று  என்று இருந்திடாது
இத்தோடு போதுமென்று எல்லை வகுக்காது
ஆற்றோடு ஓடம் அமைதியாய்
செல்லல்போல
காற்றோடு நீயும் அணையாமல் எரிகின்றாயே

காட்டுத் தீபோல் எரிந்து வனம் அழிக்காது
பூட்டை உடைத்தாய் புதுமைகள் புகுத்த
நாட்டு மக்களிடம் பகிர்ந்திட்ட பகுத்தறிவால்
வேட்டு வைத்துடைத்தாய் மூடப் பழக்கமெலாம்

மலர்மிகுசோலை மணம் பரப்பும் மணத்தால்
பலரது படைப்பும் உன்நிலை கூறும் தரத்தால்
கலவாதன கலந்து கருத்தொழியா நிறத்தால்
நிலமதில் நின்றாய் நெடிதுயர்ந்து உரத்தால்

ஊட்டிவளர்க்க யாழ் பாஸ்கர் உனக்குண்டு
ஏட்டிற்கிணை இலக்கியங்கள் உன்னுள்ளுண்டு
போட்டிபோட்டு படைக்க படைப்பாளிகளும் உண்டு   
கூட்டியே பலபெருமைகளுடன்
குவலயத்தில் நெடுநாள் வாழி!

சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *