இலங்கை

50 ஆயிரம் பேர் திரண்ட பேரணி – அரசுக்கு பலத்த தாக்கம்! மொட்டு கட்சி சூளுரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள போதிலும், அவரும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறையினருக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்,

“கடந்த 12ஆம் திகதி எமது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரணி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் விவசாயத்துறை மீதான அலட்சியப் போக்கிற்கு எதிராக, அநுராதபுரத்தில் பெருந்திரளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அரசாங்கம் தற்போது ஆடம்பரக் கூடாரங்களை அமைத்து, அரச அதிகாரிகளை வரவழைத்து 1,000 முதல் 1,500 பேரைக் கொண்டு கூட்டங்களை நடத்துகிறது.

ஆனால், அநுராதபுரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட இந்த எதிர்ப்புப் பேரணி அரசாங்கத்திற்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் நலனுக்காகவே நாங்கள் போராடுகிறோம்.

அரசாங்கம் தனது பொறுப்புகளைக் கைவிட்டுள்ள நிலையில், தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுப்பதை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. எவ்வளவு அடக்குமுறைகள் வந்தாலும் மக்களுக்கான எமது செயற்பாடுகள் தொடரும்.

அரசாங்கம் பொய்யான பிரச்சாரங்களை விடுத்து, 2028ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கடன் சுமையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அத்தியாவசிய அபிவிருத்திகள் குறித்து அரசாங்கத்திடம் எவ்வித தெளிவான திட்டமும் இல்லை.

இவ்வாறான நிலையில், அரசாங்கம் சரியான பாதைக்கு வரும் வரை எமது போராட்டமும் மக்கள் விழிப்புணர்வும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *