உலகம்

ஹவுத்திகளின் அச்சுறுத்தல்: இஸ்ரேல், பிரித்தானியாவிடம் உதவி கோரும் சவூதி

யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவூதி அரேபியாவைப் பாதுகாக்கும் வகையில், உளவுத்துறை உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக Walla ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா மீதான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக, எண்ணெய் விநியோகக் குழாய்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பிரதான விநியோகக் குழாயின் செயல்பாடுகள் பகுதியளவில் முடங்கின.

மேலும், யேமன்-சவூதி எல்லைக்கு அருகே உள்ள பள்ளிவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மீதும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதேவேளையில், செங்கடலில் உள்ள பல முக்கிய தீவுகளைக் கைப்பற்றியுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ‘பாப் அல்-மண்டப்’ (Bab al-Mandab) நீரிணை வழியாகச் சவூதி கப்பல்கள் செல்வதைத் தடுத்துள்ளனர். இது சவூதி அரேபியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் இராஜதந்திர முற்றுகையாகக் கருதப்படுகிறது.

இந்த பாதுகாப்புச் சூழல் சவூதி அரேபியாவிற்கு மட்டுமின்றி, பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஈரான் மற்றும் ஹவுத்திகளுடன் ஏதேனும் உடன்பாடுகளை எட்டினால், தங்களை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க ஆள் இன்றித் தனித்து விடப்படுவோம் என்ற அச்சம் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு எழுந்துள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியா தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் CENTCOM மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஏற்கனவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானியப் படைகளின் நகர்வுகளைக் கண்டறியும் உளவுத்துறை நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அமெரிக்காவிற்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வான்வழி மற்றும் கடற்படைப் பரவலைக் கண்டறியவும், அவர்களின் எதிர்காலத் திட்டங்களை அடையாளம் காணவும் தேவையான உளவுத்துறை உதவிகளையே சவூதி அரேபியா கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பாப் அல்-மண்டப் நீரிணையிலிருந்து ஹவுத்திகளை விரட்டவும், எண்ணெய் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் பிரித்தானியாவிடமும் சவூதி அரேபியா உதவி கோரியுள்ளதாகப் Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக பிரித்தானிய இராணுவ ஆலோசகர்களை அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், கூடுதல் உதவிகள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *