இலங்கை

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கில் திருப்பம்: பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியிருந்தது.

குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சட்டமா அதிபர் தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தம்பையா பிரகாசனுக்கு 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், நான்கு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தம்பையா பிரகாசனுக்கு எதிராக, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *