கவிதைகள்

திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்!… கவிதை… ஜெயராமசர்மா

அரனாரின் திருக்குமரன் அருளாலே அருணகிரி
அமுதமாய் திருப்புகழை அள்ளியே வழங்கினார்
அள்ளியே வழங்கிய அமுதத் திருப்புகழை
தமிழன்னை மனமேற்றித் தானணைத்துக் கொண்டாள்

சம்பந்தப் பெருமானே சந்தத்தின் தந்தை
அவர் வழியைப் பற்றினார் அருணகிரிநாதர்
அன்னைத் தமிழன்னை அகமகிழச் சந்தத்தை
அள்ளி அள்ளி வழங்கினார் அருணகிரிநாதர்

இத்தனை சந்தங்கள் எப்படித்தான் வந்தனவோ
எண்ணியே பார்த்திட்டால் வியப்புத்தான் எழுகிறது
பக்தியுடன் அருணகிரி பாடிவைத்த அனைத்தும்
சித்தமதைத் திருத்த வந்த தத்துவங்களாகும்

அருணகிரி வாழ்விலே அளவிலாத் துன்பம்
துன்பத்தைத் தாங்காமல் துடித்தாரே அருணகிரி
மண்ணைவிட்டு மறைந்துவிட மலையுச்சி நின்றார்
விழுகின்ற வேளையிலே வேலவனே தாங்கினார்

தாங்கி நின்றவேலவன் தமிழ்பாடு என்றார்
முத்தைத் தருவே முதலாக வந்தது
திருமுருகன் தாங்கியதால் திருப்புகழே மலர்ந்தது
தமிழன்னை செய்தவத்தால் சந்தக்கவி நிறைந்தது

திருப்புகழைப் பாடினால் செய்தவினை அகலும்
திருப்புகழைப் பாடினால் சிறப்பாக வாழ்ந்திடலாம்
திருமுருகன் ஓடிவந்து திருவருளைத் தந்திடுவான்
தினமுமே திருப்புகழைப் பாடிடுவோம் வாருங்கள்

துன்பமும் துயரமும் சொல்லாமல் ஓடிவிடும்
துரத்துகின்ற வல்வினைகள் பொடிப்பொடியாய் ஆகிவிடும்
திருப்புகழே மருந்தாகும் திருப்புகழே விருந்தாகும்
திருத்தமுடன் வாழுதற்குத் திருப்புகழைப் படித்திடுவோம்  !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button