இலங்கை

மாகாண சபைத் தேர்தலை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்!; சுரேன் ராகவன் வலியுறுத்தல்

மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் பறிக்கப்பட்டு வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளருமான அவர், ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான டில்வின் சில்வா ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டியுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், அடுத்தகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக அரசாங்கத்தின் மீது அனைத்து அரசியல் அழுத்தங்களையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, அடுத்த 30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கையாக இருப்பதாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் அவர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டின்படி, தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைப்புகளிடமிருந்தும் நிதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லண்டனில் இவ்வாறான நிதியைப் பெற முயற்சித்தபோது அங்குள்ள அமைப்புகள் அதனை நிராகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளதாக சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மற்றும் டில்வின் சில்வா ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமன்றி, பொதுமக்கள் முன்னிலும் வந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

அதேநேரம், பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இயக்கங்களிடமிருந்தோ அரசாங்கம் எந்தவித நிதியையோ உதவியையோ பெறவில்லை என்பதை அரசாங்கம் நாட்டுக்கு நிரூபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button