கைது செய்யப்படுவாரா, இல்லையா?; கோதாபய விடயத்தில் உறுதியளிக்க முடியாது!; மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

பிரதிவாதிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறாமல் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட மாட்டார் என்று தன்னால் உறுதியளிக்க முடியாது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நேற்று புதன்கிழமை, அந்த நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுவின் பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போது, மனுதாரரான கோதாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் கருத்தை முன்வைக்கையில், தனது கட்சிக்காரர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய அவரை கைது செய்வதற்கு கட்சிக்காரரைக் இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
இருப்பினும், மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் இன்று (நேற்று) காலையிலேயே தமக்குக் கிடைத்ததாகவும், பிரதிவாதிகளிடமிருந்து தமக்கு இதுவரை எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் இதனால், பிரதிவாதிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறாமல், இந்த மனுதாரரைக் கைது செய்ய மாட்டோம் என நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த மனு மீதான பரிசீலனை நேற்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மனு மீதான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பின்னர் இன்று வியாழக்கிழமை வரையில் மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.
![]()