இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது- மனோ இடித்துரைப்பு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மையான குற்றவாளிகளையும் அதன் பின்னணியையும் வெளிக்கொண்டு வரும் தற்போதைய அரசின் இந்த நேர்மையான முன்னெடுப்புகளுக்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அப்பழுக்கற்ற இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் இருந்தது என்பது உண்மைதான். இல்லாவிட்டால், வெளியில் இருந்து எவர் தூண்டிவிட்டாலும் கூட, தற்கொலை குண்டுதாரியாக மாறும் அளவுக்கு யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், இந்த ஒருசில தீவிர அடிப்படைவாதிகள் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் மக்களையும் எவ்விதத்திலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

உண்மையில், இந்த தீவிரவாதக் குழுக்கள் குறித்துப் பல முஸ்லிம் சமூக, மதப் பிரமுகர்கள் உரிய காலப்பகுதியில், மிகுந்த பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்கு எழுத்துமூலமாகத் தெளிவான தகவல்களை வழங்கியிருந்தனர். நபர், இடம் உள்ளிட்ட துல்லியமான விவரங்கள் பொலிஸாரிடம் இருந்தன.

எனவே, இந்தத் தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்ட வெறியர்களை முன்கூட்டியே கைது செய்து விசாரிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் போதிய அவகாசமும், ஆதாரங்களும் இருந்தன. அவர்களைக் கைது செய்து, தீவிரவாத ஒழிப்புப் புனர்வாழ்வு வழங்கிப் பாரிய விபரீதத்தைத் தடுத்திருக்கவும் வாய்ப்புகள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகளும் காத்திரமான எச்சரிக்கைத் தகவல்களை உரிய நேரத்தில் வழங்கியிருந்தன.

இருப்பினும், உரிய கைதுகளையோ, விசாரணைகளையோ அல்லது தடுப்பு நடவடிக்கைகளையோ முன்னெடுக்க எமது பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறைகள் திட்டமிட்டுத் தவறிவிட்டன. அதன் விளைவாகவே குண்டு வெடித்துப் பாரிய விபரீதங்கள் நிகழ்ந்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின ஆகவே, அந்தப் பொறுப்பான அதிகாரிகள் ஏன் ‘கடமை தவறினர்?’ என்பது முதலில் கண்டறியப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சுரேஷ் சலே, பல இலங்கையர்களைக் கைது செய்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்து விசாரித்துள்ளார். ஆகவே, சட்டபூர்வ விசாரணை என்பது அவருக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. இப்போது விசாரணைக்கு அஞ்சி அவர் ஒரு ‘பச்சை குழந்தை’யைப் போல் நடிக்கக் கூடாது.

கடந்த போர்க் காலத்தில் அவர் ஒரு தேசப்பற்றாளராகப் பணியாற்றினார் என்று கூறப்படும் கதைகள், இன்று அவரைப் பாரபட்சமின்றி விசாரிப்பதைத் தடுப்பதற்கான காரணங்களாக அமைய முடியாது. உண்மையில், சுரேஷ் சலேயிடம் இருந்தது ‘தேசப்பற்றா’ அல்லது ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் ‘வேறெந்த பற்றா’ என்பது இந்த விசாரணைகளின் மூலம் வெளிவர வேண்டும்.

அதேவேளை, இன்றைய புதிய விசாரணைகளுக்குத் தலைமை தாங்கும் உயர் அதிகாரிகளான ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் புதிதாக வந்தவர்கள் அல்லர். இந்த விபரீதங்கள் நிகழ்ந்த காலகட்டத்திலும் அவர்களே பொறுப்பான பதவிகளில் இருந்தனர். ஆகவே, அன்று அவர்களைச் சுதந்திரமாகப் பணியாற்றவிடாமல் தடுத்த அந்த ‘மர்மக் கரம்’ எது என்பதும், இவற்றுக்குப் பின்னால் உள்ள மாபெரும் சூத்திரதாரி யார் என்பதும் சட்டத்தின் முன் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button