விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காகவே ஒருவர் கைது; யாழ். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்றும் அவை மக்களை தவறாக வழிநடத்துபவை என்று பொலிஸார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மே 31 அன்று சாவகச்சேரி, நாவற்குளியில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பாடியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் ஜூன் 2 அன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் விசாரணையில், சந்தேக நபர் அந்த நிகழ்விலிருந்து இரண்டு பாடல்களைத் திருத்தி, விடுதலைப் புலிகளைப் போற்றும் வகையில் தனது சமூக வலைதளக் கணக்கில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தில் வைரலாக பரவுவதை எளிதாக்கும் வகையில், தடைசெய்யப்பட்ட குழுவிற்கு ஆதரவான உள்ளடக்கத்தைச் சேர்க்கும் விதமாக அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே மாற்றியமைக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர், 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3(G) பிரிவின் கீழ் ஜூன் 3 அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படுத்தப்பட்டு ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
குடிமக்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்று பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியதுடன், தவறான சமூக ஊடக தகவல்கள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
![]()