ஆடையில் மறைத்து 30 ஆமைகளை கடத்திய இளம்பெண் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில், தனது ஆடைகளுக்கு அடியில் 30 அரிய வகை ஆமைகளை ஒட்டி வைத்து கடத்த முயன்ற 19 வயது இளம்பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து தைபே நகருக்குச் செல்லவிருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரின் அசைவுகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் ஒட்டுநாடா மூலம் 30 ஆமைகள் கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
30 இந்திய நட்சத்திர ஆமைகள் (Indian Star Tortoises). இதில் 29 ஆமைகள் உயிருடனும், ஒன்று இறந்த நிலையிலும் காணப்பட்டது.
சர்வதேச கறுப்புச் சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 9,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆமைகளை அசையாமல் இருக்க டேப் கொண்டு ஒட்டி, துணிப் பைகளில் வைத்து தனது உடலோடு இணைத்து கடத்த முயன்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண் மீது விலங்குகளை சட்டவிரோதமாகக் கடத்துதல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏதேனும் பெரிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்பது குறித்து தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது மீட்கப்பட்ட ஆமைகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆசியாவில் வனவிலங்கு கடத்தல்காரர்களின் முக்கிய மையமாக தாய்லாந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
![]()