தமிழக வாக்காளர்கள் யாரிடம் ஏமாந்தார்கள்?… நியூசிலாந்து சிற்சபேசன்


ஏப்ரல் 23ல், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனையொட்டி பெருவாரியான கருத்துக்கணிப்புக்கள் வெளியாகின. அதிலே பெரும்பாலானவை, கட்சிகள் சார்ந்தவையாக அல்லது, கட்சிகளிடம் சார்புத்தன்மை கொண்டவையாகவே காணப்படுகின்றன. அதனால், அவை கருத்துக்கணிப்புக்களா? அல்லது, கருத்துத்திணிப்புக்களா? என்று கேட்கும் நிலையே காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியிலேயே, வாக்களிப்பு பூர்த்தியாகிய பின்னரான கருத்துக்கணிப்புக்கள் ஏப்ரல் 29ல் வெளியாகின.
அதிலே, “சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ்”, “என்டிடிவி, ரிபப்ளிக் டிவி” போன்றவற்றின் கருத்துக்கணிப்புக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொல்கின்றன.
மறுவளத்தில், “டைம்ஸ் நவ்”, “சிஎன்என்” போன்றவற்றின் கருத்துக்கணிப்புக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாஜக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று சொல்கின்றன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறுவதாகவே, “ஆக்சிஸ் மை இந்தியா”, “இந்தியா டுடே” போன்றவற்றின் கருத்துக்கணிப்புக்கள் சொல்கின்றன.
முற்றிலும் மாறுபட்டதாக, “தொங்கு” சட்டமன்றம் ஏற்படுமென “காமாக்யா” கருத்துக்கணிப்புச் சொல்கின்றது.
இவ்வாறாக, கருத்துக்கணிப்புக்கள் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகின்றன. இருந்தாலும்கூட, சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லை.
தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும், வாக்குப்பதிவு நாளன்று, ஒரு புதிய பாணி ஆக்கிரமித்திருந்தது.

விஜய்யைப் போன்று வெள்ளைச் சட்டையும் “பேஜ்” நிறத்தில் காற்சட்டையும் அணிந்துகொண்டு இளைஞர் – யுவதிகள் வாக்குச்சாவடிகளுக்குச் சாரைசாரையாக வந்தனர். அதனை, வெறும் ஆடை அலங்காரமாகக் கடந்துபோக முடியவில்லை. மாறாக, “எங்கள் வாக்கு விஜய்க்கு” என்பதை உரக்கச் சொல்லிய ஒரு “டிரெண்டாகவே” தெரிந்தது. ஆனால், அதே உடையில் ஸ்டாலின், அண்ணாமலை போன்றவர்களும் வாக்களிக்க வந்தபோது எல்லாமே “சொதப்பல்” ஆகிவிட்டது.
வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றிருந்தார். அங்கே, அவர் சைக்கிள் ஒட்டியது “சோஷல் மீடியா”வில் “டிரெண்ட்” ஆகியது.
அதிலே, ஸ்டாலின் சைக்கிளில் ஏறியபாங்கு கவனத்தை ஈர்த்தது. சைக்கிளில் ஏறுவதற்கு நான்கு பேர் உதவுகிறார்கள். பின்னர், பிரேக் போன்ற சைக்கிளின் பயன்பாடுகளை மற்றுமொருவர் சொல்லிக் கொடுக்கின்றார். ஐந்தாறுபேர் சுற்றிவருவது போன்று பாசாங்கு செய்துகொண்டு, “தடுமாறுகின்ற” ஸ்டாலினின் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு கூடவே ஓடுகின்றனர்.
அதனைப் பார்த்தபோது, ஸ்டாலின் அவர்களைப் “பொம்மையாக்கி” சபரீசன் வகையறாக்களே ஆட்சிக் கட்டமைப்பை இயக்குவதான அரசல்புரசலான குற்றச்சாட்டு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
“விஜய் சைக்கிள் ஓட்டினார்” என்பதற்காக, கொடைக்கானலில் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி, “கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி” ஆகியிருக்கவேண்டாமே என்னும் எண்ணமே ஏற்படுகின்றது. காரணம்; ஸ்டாலினின் அரசியல் அனுபவம் எங்கே? விஜய் எங்கே?.
அதேவேளையில், சினிமா கவர்ச்சியூடாக அரசியலில் விஜய் கவனம் பெற்றுள்ளமை யதார்த்தமாகும்.
அதனாலேயே, விஜய் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்னும் அச்சம் பொதுவெளியில் காணப்படுகின்றது. “குழந்தைகளைக் கொன்றுவிட்டு இறந்துவிடுவேன்”, “தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வேன்” என்றெல்லாம் “சோஷல் மீடியாவில்” பரவலாகப் பிதற்றுகின்றனர். “குரைக்கிற நாய், கடிக்காது” என்று கடந்துசெல்லலாமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்.
தமிழகத்திலே, 2.9 கோடி பெண்களும், 2.8 கோடி ஆண்களுமாக மொத்தம் 5.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதிலே, 60 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் 4.5 கோடி வரையிலும், 18-19 வயதுக்கு உட்பட்ட பதினைந்து இலட்சம் வரையான முதன்முறை வாக்காளர்களும் உள்ளடங்குகின்றனர்.
அதிலே, 4.88 கோடி வரையானோர், ஏப்ரல் 23ல் நடைபெற்ற தேர்தலிலே வாக்களித்துள்ளனர். அந்தவகையிலே வாக்குப்பதிவு 85 விழுக்காட்டை எட்டியுள்ளது.
பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிப்பது, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை என்பதாகவே வியாக்கியானம் செய்யப்படுவதுண்டு. ஆனால், தற்போதைய சூழலை அந்தவகையிலே பார்க்கமுடியவில்லை. மாறாக, விஜய் அரசியல் பிரவேசமும், அதனூடாக புதிய வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் ஆர்வமுமே காரணமாக இருக்கலாம் என்றே கருதமுடிகின்றது.

‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற நலத்திட்டங்கள் பெண் வாக்காளர்களை கவர்ந்துள்ளது. அதனால், ஆட்சியைத் தொடர்வதற்கான மக்கள் ஆணை கிடைக்குமென திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகின்றது.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி காரணமாக, ஆட்சி செய்வதற்கான மக்கள் ஆணை கிடைக்குமென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காத்திருக்கின்றது.
இளைய தலைமுறை வாக்காளர்களின் எழுச்சியூடாக, முதலமைச்சர் ஆகிவிடலாம் என விஜய் தரப்பு அவசரப்படுகின்றது.
எப்போதும்போல, உட்கட்சிப் பூசல்களிலே காங்கிரஸ் காலத்தைக் கழிக்கின்றது. தமிழகத் தேர்தலிலே வெற்றி பெறுவதைக் காட்டிலும், ராகுல் காந்தி தமிழகத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரா?, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறுவாரா?, செல்வப்பெருந்தகையிடமிருந்து பறிக்கப்படுகின்ற மாநிலத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான போட்டி போன்ற விடயங்களிலேயே காங்கிரஸ்காரர் “பிஸியாக” உள்ளனர்.

மறுவளத்தில், சென்ட் ஜோர்ஜ் கோட்டைக்குள்ளே நுழைவதற்காக, “மெய்வருத்தம் பாராமல், பசிநோக்காமல், கண்துஞ்சாமல்” பாரதிய ஜனதாக் கட்சி “திரைமறைவில்” உழைத்துக் கொண்டிருக்கின்றது. மகராஷ்டிரம், பீகார் அனுபவங்களை, தமிழகத்திலே பரீட்சித்துப் பார்க்க “ஓடுமீன் ஓட, உறுமீன் வரும்வரை” காத்திருக்கின்றது. ஆம் ஆத்மி கட்சிக்குள்ளே புகுந்து “விளையாடிப்” பெற்ற வெற்றியும் உற்சாக “டொனிக்”காகியுள்ளது.
எது எப்படியாகிலும், தமிழக வாக்காளர்கள் யாரிடம் ஏமாந்தார்கள் என்பது மே 4ல் தெரிந்துவிடப் போகின்றது.

![]()