பலதும் பத்தும்

தோண்டத் தோண்ட வெளிவந்த 30 விசித்திர உருண்டைகள்

சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ (Ganzhou) நகரில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மர்மங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியிலிருந்து சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் வெளிவந்துள்ளது. 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் (Fossils) கண்டறியப்பட்டுள்ளது சர்வதேச அறிவியல் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு பணியாளர்கள் பள்ளம் தோண்டியபோது, உருண்டை உருண்டையாகப் பாறை போன்ற சில பொருட்கள் தென்பட்டுள்ளன. ஏதோ விசித்திரமான பொருள் என்று கருதி அருகில் சென்று பார்த்தபோதுதான், அவை அனைத்தும் டைனோசர் முட்டைகள் என்பது தெரியவந்தது. எரிமலைச் சாம்பலுக்கு அடியில் பல கோடி ஆண்டுகளாக இவை மிகப்பத்திரமாகப் புதைந்து கிடந்துள்ளன.

பொதுவாக டைனோசர் முட்டைகள் சிதைந்துபோக அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால், இங்கு கண்டெடுக்கப்பட்ட 30 முட்டைகளும் எவ்வித சேதமுமின்றி முழுமையாக இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். கான்சோ நகரம் ஏற்கனவே “டைனோசர்களின் தாயகம்” என்று அழைக்கப்படும் இடம்தான் என்றாலும், ஒரே இடத்தில் இத்தனை முட்டைகள் இவ்வளவு தெளிவாகக் கிடைப்பது இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தெரோபாட் வகை டைனோசர்கள்: இந்த முட்டைகள் ஒவ்வொன்றும் சுமார் 2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட ஓடுகளைக் கொண்டுள்ளன. இவை அந்த காலத்தில் வாழ்ந்த “தெரோபாட்” (Theropod) வகை டைனோசர்களுடையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு டைனோசர்களின் வாழ்வியல் குறித்து மேலும் பல புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *