இந்தியா

பிஹார் முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்த முதல்வராக பதவியேற்கும் பொருட்டு, பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சாம்ராட் சவுத்ரி இன்று முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக 10 ஆவது முறையாக பதவி வகித்து வந்தார். அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அவர் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 10 ஆம் திகதி மாநிலங்களவை எம்.பியாக அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னனிடம், நிதிஷ் குமார் இராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பிஹார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்க இருக்கிறார். நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பிஹார் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன்மூலம், பிஹாரில் முதல்முறையாக பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். சாம்ராட் சவுத்ரி இன்று முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *