இலங்கை

மக்கள் முன் செல்ல முடியாத நிலையில் அமைச்சர்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென்மாகாண விவசாயிகளுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களை கூச்சலிட்டு விரட்டுகின்றனர். அவர்கள் கூறிய பொய்களும் மக்களை ஏமாற்றியதுமே இதற்கு காரணமாகும். நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் மிகவும் கஸ்டங்களுடன் பெரும் அழுத்தங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கத்திற்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது.

இந்த அரசாங்கம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றன. நாங்கள் உரத் தட்டுப்பாடு இருப்பது தொடர்பில் கூறும் போது, அவ்வாறு தட்டுப்பாடு இல்லை. தாராளமாக இருக்கின்றன என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு செய்ய முடிந்தது ஒன்றே. ஏதாவது ஒரு குழுவுக்கு பணத்தை கொடுத்து சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு பிரசாரங்களை செய்துகொள்கின்றனர்.

இதேவேளை இந்த அரசாங்கத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்யத் தெரியவில்லை. ரஷியாவுடன் கதைக்குமாறு முன்னறே கூறியிருந்தோம். அதனை அப்போது கணக்கில் எடுக்காமல் இப்போதே அது தொடர்பில் பேசுகின்றனர். அத்துடன் உரத்தை இந்தியா, வியட்நாமில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கூறினோம். ஆனால் ஊடகங்களுக்கு முன்னால் வந்து உரம் தட்டுப்பாடு இல்லை என்று நடிக்கின்றது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *