உலகம்

ஐநா தடையை மீறி சீனா மற்றும் துருக்கியிடமிருந்து போர் விமானங்களை வாங்கிய லிபியா

ஐக்கிய நாடுகள் சபையின் நீண்டகால ஆயுதத் தடையை மீறி, லிபியாவின் கிழக்குப்பகுதி இராணுவத் தலைவர் கலீஃபா ஹப்தார் (Khalifa Haftar), சீனா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட நவீன போர் ட்ரோன்களை (Combat Drones) வாங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிபியாவின் பெங்காசி நகருக்கு கிழக்கே 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அல்-காதிம் (Al Khadim) விமான தளத்தில் குறைந்தது மூன்று புதிய ட்ரோன்கள் இருப்பதை வணிக ரீதியிலான செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

போர்நிறுத்தம்

இந்த ட்ரோன்களில் ஒன்று சீனாவின் ‘பெய்லாங்-1’ (Feilong-1) வகை என்றும், மற்றவை துருக்கியின் புகழ்பெற்ற ‘பேராக்டர் டிபி2’ (Bayraktar TB2) வகை என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆயுதங்களை வழங்க ஐநா தடை விதித்துள்ள போதிலும், ஹப்தாரின் லிபிய தேசிய இராணுவம் (LNA) தனது வான்வழிச் சக்தியைப் பலப்படுத்தி வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டில் போர்நிறுத்தம் எட்டப்பட்டாலும், லிபியா தற்போதும் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு அரசாங்கங்களாகப் பிரிந்து கிடக்கிறது.

மீண்டும் பதற்றம்

இந்தச் சூழலில் ஹப்தார் பெற்றுள்ள புதிய ட்ரோன்கள், எண்ணெய் வயல்கள் நிறைந்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவரது பிடியை வலுப்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐநா தடையை மீறி சீனா மற்றும் துருக்கியிடமிருந்து போர் விமானங்களை வாங்கிய லிபியா | Libya Fighter Jets China Turkey Violation Un

அதே சமயம், இந்த ட்ரோன்களை இயக்குவதற்கான தொழில்நுட்ப அறிவு ஹப்தாரின் படைகளிடம் இல்லாததால், அவற்றை இயக்குவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து சுமார் 4 பில்லியன் டொலர் மதிப்பிலான போர் விமானங்களை வாங்க ஹப்தார் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்த புதிய ட்ரோன்களின் வருகை பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *