பலதும் பத்தும்

16,000 ‛அடி’ நடந்ததால் பணி நீக்கம்

ஊழியர் ஒருவர் ஒரு நாளில் 16,000 ‛அடி’ நடந்ததை சுட்டிக்காட்டி பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், சீனாவில் தனியார் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்த பணி நீக்கத்தை எதிர்த்து ஊழியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.50 லட்சம் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இந்த பணி நீக்கத்தின் பின்னணி மற்றும் நீதிமன்றம் போட்ட உத்தரவு பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் (Jiangsu Province) உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சென். இது அவரது குடும்ப பெயராகும் (Surname). இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்தார். இந்த விடுமுறை 2019 மார்ச் மாதம் வரை சென்றது.

அதாவது தொடர்ந்து பணி செய்ததால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒரு மாதம் வரை விடுப்பு எடுத்தார். அதன்பிறகு சென் மீண்டும் அலுவலகம் வந்தார். அரை நாள் பணி செய்த நிலையில் மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்தார். இந்த முறை கால் வலி என்று கூறினார்.

அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றவர், மருத்துவர் ஒருவாரம் வரை ஓய்வு எடுக்கும்படி கூறிய மருத்துவ ஆவணங்களை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும் அவர் கால்வலி சரியாகவில்லை என்று விடுப்பதை நீட்டிப்பு செய்தார்.

இதனால் நிறுவனம் அவர் மீது கோபமடைந்தது. ஆனால் நிறுவனம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியான சூழலில் சென் தனது மருத்துவ ஆவணங்களை நிறுவனத்திடம் வழங்கி விடுப்பு நீட்டிப்பு பற்றி விளக்கம் சொல்ல சென்றார்.

அப்போது காவலாளி அவரை நிறுவனத்துக்குள் விடவில்லை. அவரை பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் அறிவித்தது. அதோடு பணி நீக்கத்துக்கு நிறுவனம் கூறிய காரணம் அதிர்ச்சியாக அமைந்தது. அது என்னவென்றால், கால் வலியில் விடுப்பில் இருந்த சென் ஒரு நாளில் 16 ஆயிரம் ‛ஸ்டெப்’ வரை நடந்துள்ளார். மருத்துவ ஆவணங்களை நிறுவனத்துக்கு திரும்பும்போது ஓடிவந்தார். இதனால் அவர் போலியான மருத்துவ ஆவணங்களில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக குற்றம்சாட்டி பணி நீக்கம் செய்தது.

இதனால் அதிர்ந்துபோன ஊழியர் நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கில் சென் தரப்பு வாதம் மற்றும் நிறுவனம் தரப்பிலான வாதம் முன்வைக்கப்பட்டது.

இறுதியாக சென்னின் மருத்துவ ஆவணங்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் அவர் மீது தவறு இல்லை என்று கூறியது. அதோடு அவரது பணி நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் சென்னுக்கு ரூ.1,18,779 யுவான் (இலங்கை ரூபாய் மதிப்பில் 50 இலட்சத்து 76 ஆயிரத்து 892 ரூபாய் 51 சதம்) நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சென் அலுவலகத்தை நோக்கி ஓடி வருவதும், அவர் தினமும் எத்தனை ஸ்டெப் நடந்தார் என்பதை காட்டும் தொழில்நுட்பத்தையும் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சமர்பித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் சென்னின் மருத்துவ ஆவணங்கள் சரியானதாக இருந்ததாகவும், திடீர் பணி நீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறி இந்த தீர்ப்பை வழங்கியதாக சீனா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button