இலங்கை

டிரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவிடமிருந்துகூட நிவாரணங்களை எதிர்பார்க்க முடியாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்துறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆடை தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட தொழிலதிபர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்துறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

நமது பொருளாதாரம் ஆடைகள் மற்றும் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால் கிடைக்கும் அந்நிய செலாவணியை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு பொருளாதாரத்தை வெறுமனே ஆடை ஏற்றுமதியால் மாத்திரம் இயக்க முடியும் என்று எண்ணினால் அது தவறு.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால், அந்தப் பக்கத்திலிருந்தும் நாம் பாதிக்கப்படுவோம். இந்நிலையில் இந்தியாவுடன் தேவையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால், அந்தப் பக்கத்திலிருந்தும் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது. நான் கூறியது போல் செயற்பட்டிருந்தால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

சந்திப்பில் கலந்து கொண்டிருந்த ஆடைத் துறையில் முன்னோடி தொழிலதிபர் ஒருவர், இப்போது ரணில் பாதையிலோ அல்லது பெலவத்தை பாதையிலோ செல்லலாமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button