உலகம்

அமெரிக்காவை தாக்கினால் ஆயுதப்படைகளின் முழு பலமும் பிரயோகிக்கப்படும் – ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரான் மீதான இரவு நேர தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான், அமெரிக்கா மீது தாக்குதல் மேற்கொண்டால் அமெரிக்க ஆயுதப்படைகளின் முழு பலமும் இதுவரை கண்டிராதளவு பிரயோகிக்கப்படும் என ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதனூடாக மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் ட்ரம்ப் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ஓமானில் நடைபெறவிருந்த அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன.

ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான தெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது விரிவான தொடர் தாக்குதல்களை நிறைவு செய்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தன.

கடந்த 13 ஆம் திகதி அதிகாலையில் ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்தது.

இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற திட்டத்தின் ஓர் பகுதியாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

இதில் ஈரானிய அணு விஞ்ஞானிகள் அறுவரும் ஈரானின் புரட்சிகர காவல் படை தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் கூறியது.

இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button