பலதும் பத்தும்

புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!

ராஜஸ்தானில் புலிக்குட்டியை தொட்டுப் பார்த்து விளையாடிய ஒருவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் அருகே உள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவில் ஒருவர் புலிக்குட்டிகளை தொட்டு பார்த்துள்ளார். அவற்றுடன் விளையாடி உள்ளார். இது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. பின்னர் இந்த நிகழ்வு பேசும் பொருளானது.

இது, புலிகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வன உயிரின ஆர்வலர்கள், ராஜஸ்தான் அரசுக்கு கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து, புலிக்குட்டிகளை தொட்டுப் பார்த்த அடையாளம் தெரியாத அந்த நபர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். நாட்டின் வனவிலங்குகள், பறவைகள் மற்றும் தாவர இனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த மனிதன் மூன்று குட்டிகளுக்கு எப்படி இவ்வளவு அருகில் வந்தான் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். அந்த மனிதனை அடையாளம் காணவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வன விலங்குகள் ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த சம்பவம் நடப்பதற்கு வன உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். புலிகள் வசிக்கும் இடத்திற்கு மக்கள் எப்படி நுழைய முடியும்?

புலிக்குட்டிகள் இருப்பதை அதிகாரிகள் அறிந்திருக்கும் போது, ​​கண்காணிப்பை அதிகரித்து இருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக இணையத்தில் வைரலான வீடியோவில், புலிக்குட்டிகள் படுத்திருந்த குழாயில் ஒரு மனிதன் நுழைந்து, அவற்றுடன் விளையாடுவதையும், அதை தனது கேமராவில் படம் பிடிப்பதும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button