முச்சந்தி

அவுஸ்திரேலிய தேர்தல் 2025 : கருத்துக் கணிப்பில் யார் முன்னிலை?… குடிவரவுக் கொள்கையில் மாற்றம் வருமா?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தன் பின்னர் கடந்த ஐந்து வாரங்களாக தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சிலகாலம் சரிந்திருந்தாலும், மீண்டும் முன்னிலையில் உள்ளது.
கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாவது தடவையாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்பார்க்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) தொழிலாளர் கட்சி, தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள 151 இடங்களில் 77 இடங்களைக் கொண்டுள்ளது.
அதேவேளை பெரும்பான்மையான வாக்காளர்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்தேகம் கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
எதிர்கட்சி செல்வாக்கு வீழ்ச்சி:
எதிர்கட்சியான லிபரல் கட்சியின் (Liberal Party) தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் எலான் மாஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இத் தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதாவது, அரசு ஊழியர்கள் முழு நேர வேலைக்கு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த ஜனவரியில் டட்டனின் லிபரல் கட்சி கூட்டணி ஆறு வீதம் முன்னிலையில் இருந்தது. தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமரின் ஆளும் கட்சி ஒன்பது வீதம் அதிகரித்து கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்றுள்ளது.
அஞ்சல் வாக்குகள் அதிகரித்து வரும் நிலையில், வாக்களிக்க தகுதியுள்ள அவுஸ்திரேலியர்களில் பாதி பேர் மே 3ம் தேதிக்கு முன்பாகவே வாக்களித்து விடுவார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகிறது.
அவுஸ்திரேலியா நாடாளுமன்ற ஜனநாயகம்:
அவுஸ்திரேலியா நாடாளுமன்றம் (Parliament of Australia) அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் (Commonwealth parliament) என்பது அரசாங்க சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும்.
இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
அவுஸ்திரேலியா அரசியமைப்பின் படி, அவுஸ்திரேலியா நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: அரசர், மேலவை, மற்றும் பிரதிநிதிகள் அவை.
அரசர் பொதுவாக தனது பிரதிநிதியாக பொது ஆளுநரை (Governor General) நியமித்துள்ளார். கீழவை (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாற்றமடையும். 1984 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது.
இது 1993 இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1996 இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது.
மேலவை (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர்.
செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் கான்பராவில் உள்ளது.
தேர்தல் கருத்துக் கணிப்பு:
தற்போதைய தேர்தலில் இரு பிரதான கட்சிகளான தொழிற் கட்சி, லிபரல் கட்சிக்கு இடையே கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர், எங்கள் அரசாங்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டது. வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றி அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா பொதுத் தேர்தல் கருத்துக் கணிப்பில் தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், முன்னிலை பெற்றிருப்பதாக கருத்துக் கணிப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அவுஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸின் தொழிலாளர் கட்சி, எதிர்க்கட்சிகளை விட முன்னிலை பெற்றிருப்பதாக இவ்வார இறுதி கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் குடிவரவுக் கொள்கை என்பது அனைத்து கட்சிகளாலும், தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல கொள்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில் குடிவரவு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் பொது மக்களிடையே பிரதிபலிக்கும்.
தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சில சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் வாக்காளர்கள் கூர்ந்து அவதானித்து வருகின்றனர்.
தொழிற் கட்சி சமூக சீர்திருத்த வேலைத்திட்டம்:
1972ல் பொருளாதார ஏற்றத்தின் கடைசிப் பகுதியில், விட்லாம் மற்றும் தொழிற் கட்சி சமூக சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தது. அந்த நடவடிக்கைகளில் எவையும் இலாப முறையின் அஸ்திவாரங்களை சிறிதும் சவாலிடவில்லை. அந்த நோக்கமும் அவற்றிற்குக் கிடையாது, ஆனால் அவை குறிப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் முன்னேற வேண்டும் என்பதைப் பிரதிபலித்தன.
1975-75 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றம் திடீரென முடிவற்கு வந்தது. 1972ல் தாராளவாத அரசாங்கம் அகற்றப்பட்டதை தொடர்ந்து முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்க எழுச்சி ஏற்பட்டதை நிறுத்தத் தவறியது. விட்டலம் அரசாங்கமே 1975ல் CIA ஆதரவுடனான சதியால், கவர்னர்-ஜெனரால் செய்யப்பட்ட நிகழ்வில் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது.
இதன் பின் பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து ஆழ்ந்த மாறுதல்களுக்கு உட்பட்டன.
பொருளாதார மறு கட்டமைப்பு திட்டம்
சீர்திருத்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு முற்றிலும் மாறான முறையில், 1983ல் பதவிக்கு வந்த ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கம் “பொருளாதார மறுகட்டமைப்புத்” திட்டத்தை தொடங்கி, அமெரிக்காவில் ஜனாதிபதி ரேகன், பிரித்தானிய பிரதம மந்திரி தாட்சர் ஆகியோரின் கீழ் தொடக்கப்பட்ட கொள்கைகளை சர்வதேச அளவில் இயைந்து செயல்படுத்தும் விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது.
அப்பொழுது முதல் எந்தக் கட்சியும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தை முன்வைத்துப் பேசுவதில்லை. உண்மையில், கடந்த மூன்று தசாப்தங்களாக “சீர்திருத்தம்” என்னும் கருத்துப்படிவமே ஒருவித ஓர்வெல்லிய முறை மாற்றத்தை அடைந்துள்ளது.
முன்பு “சீர்திருத்தம்” என்றால் பொது மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தும் கொள்கைகளை குறிப்பிட்டது. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, இலவச பல்கலைக்கழகப் படிப்பு என்பவை உதாரணத்திற்கு விட்லம் தொடக்கிய இரு முக்கிய கொள்கைகள் ஆகும்.
தொடர்ந்த தடையற்ற சந்தை சீர்திருத்தங்கள் கடந்த இரண்டரை தசாப்தங்களாக பலவித சமூகப், பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசியக் கூட்டணியின் விடையிறுப்பு இரு கூறுபாடுகளை உடையது.
எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில், சமூகச் சீற்றத்தை குடியேறுபவர்கள், அகதிகளுக்கு எதிராகத் திருப்புதல், அதே நேரத்தில் பிரச்சார அரசியல் விவாதத்தை பொருளற்ற சிந்தனை உரைகளாகக் குறைத்துவிடுதல் என்று ஏற்பட்டுவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button