முச்சந்தி

ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்த இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை

இந்தியாவின் அனுமதியுடன் தான் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களையும் பகிரங்கப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.ஒப்பந்தத்தில் எவ்விடத்திலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையில் இந்தியாவை நம்பியிருப்பது தேசிய பாதுகாப்புக்கு என்றாவதொரு நாள் அச்சுறுத்தலாக அமையும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட 7 ஒப்பந்தங்களை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை. இந்த ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்பினரும் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் இந்தியாவின் அனுமதியுடன் தான் இந்த ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்த முடியும்’ என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை பேச்சாளரின் கருத்து முற்றிலும் பொய்யானது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 7 ஒப்பந்தங்களில் இரண்டு ஒப்பந்தங்களை நான் முழுமையாக பரிசீலனை செய்தேன். ஒப்பந்தங்களின் எவ்விடத்திலும் இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

வரலாற்றில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா நிலப்பரப்பில் பெரிய நாடாக இருக்கலாம் அதற்காக அரசாங்கம் அச்சமடைய கூடாது.

இலங்கை நிலப்பரப்பில் சிறிய நாடாக இருந்தாலும் சுயாதீன நாடு. இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கின்ற போது இந்த அரசாங்கம் ஏன் மலினப்படுத்துகிறது என்பதை அறிய முடியவில்லை.

பாகிஸ்தானுக்கும் விநியோகிக்கும் நீரை முடக்குவதாக இந்தியா பாகிஸ்தானுக்கு தற்போது கடுமையான அச்சுறுத்தல் விடுக்கிறது.

இலங்கையானது வலுசக்தி மற்றும் மின்சக்தி துறையில் இந்தியாவை நம்பியிருப்பது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button