இலங்கை

எம்.பி.க்களுக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பா?

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், சபாநாயகர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கைகளை பரிசீலித்து தேவையானால் மாத்திரம் உரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆளும் கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button