முச்சந்தி

ராஜபக்ச ஆட்சியில் நடந்த அராஜகம்; ஊடக சுதந்திரம் பற்றி டலஸ் பேசுவதற்கு தகுதியில்லை 

ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் இரும்புக் கரம்கொண்டு ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டபோது, அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தராக இருந்த டலஸ் அழகப்பெரும, ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதைக் காட்டிலும் முரண்பாடானது வேறெதுவும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தாமும் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தற்போதைய அரசாங்கம் ஊடக அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் 107 நாட்களில், ஊடகங்கள் குறித்து அரசாங்கம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டலஸ் அழகப்பெருமவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையில்,

ஊடக சுதந்திரம் பற்றி டலஸ் அழகப்பெரும எழுப்பியுள்ள கவலை எந்தளவுக்கு நேர்மையானது என ஆராய வேண்டியுள்ளது.

ராஜபக்ஷக்களின் ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடிகளை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை அனைவரும் நன்கறிவர்.

டலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், அவரது தலைவர்கள் செயற்பட்ட விதம் கண்முன்னே வந்து செல்கிறது.

ஊடகவியலாளர்கள் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பழிவாங்கப்பட்டமை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் ஏனையவர்களை விடவும் எமக்கு சிறந்த புரிந்துணர்வுள்ளது.

எனவே, இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பின்நிற்க போவதில்லை எனவும் அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button