மலைகளை ஆக்கிரமிக்க தொல்லியலியல் திணைக்களம் முயற்சி; வெருகலில் திடீரென முளைத்த பெயர் பலகை
திருகோணமலை வெருகல் பகுதியில் திடீரென முளைத்த தொல்லியலியல் திணைக்களத்தின் பெயர் பலகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 கிலோ மீற்றர் வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பெயர் பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இருந்து சுமார் 1கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மலைகள் அமைந்துள்ள பகுதியே தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த மலையைச் சுற்றி 164 பேருக்கு மேற்பட்ட விவசாயிகள் ,சுமார் 160 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் பெரும்போக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையில் தொல்லியல் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்கள் தொல்லியல் சட்டங்களை மீறி புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த விகாரைகளாக மாற்றப்படுகின்ற செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் தமது பகுதியிலும் அவ்வாறான நிலை ஏற்படலாம் என தாம் அஞ்சுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இங்கு தொல்லியலுக்காக எவ்வளவு பகுதிகள் உள்வாங்கப்பட்டுள்ளது எனவும், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும் இதனால் எதிர்காலத்தில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு என்ன நடக்கும் என்ற அச்சம் நிலவுவதாகவும் அனுர அரசாங்கத்தினுடைய காலத்திலும் தொல்லியல் எனும் பெயரில் மக்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றதா? எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
குச்சவெளி பகுதியில் 1985ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பிருந்த நெல் சந்தைப்படுத்தும் நிலையம் மற்றும் சந்தை ஆகியவற்றின் காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக குச்சவெளி மக்கள் கடந்த முதலாம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()