சிவனின் அருள் கிடைக்க ஆருத்ரா தரிசனம்!

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக திகழும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

27 நட்சத்திரங்களில் “திரு” என சிறப்பித்து கூறப்படுவது சிவ பெருமானுக்குரிய திருவாதிரை.

மற்றொன்று பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரண்டும் தான்.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

“பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்.” என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது எப்படி என்பது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள்.

இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது.

இதனால் சிவ பெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள்.

திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது.

அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விடுகிறான்.

கலங்கி துடித்த திரேதாயுகா, பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.

அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்து போன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார்.

இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் தான் நடந்தது.

இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப் படுகிறது.

இந்த நாளில் சிவனை மனம் உருக வேண்டினால், நமக்கும் சிவ தரிசனம் கிடைக்கும். அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவ பெருமான் எத்தனையோ திருவிளையாடல்கள் நிகழ்த்தி இருந்தாலும், தன்னுடைய பக்தருக்காக தானே மனம் இறங்கி வந்து, அருள் செய்ததால் இந்த திருவாதிரை சிவ பெருமானுக்குரிய தினமாக கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனம் 2025ம் ஆண்டில் ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இது விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு சிவனுக்குரிய திங்கட்கிழமையிலேயே ஆருத்ரா தரிசனம் வருவது மிக விசேஷமானதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button