ரயிலை நிறுத்திய நெய் !!

ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.

‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.

“தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!”

அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. “நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை” என்று நினைத்தான்.

ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.

அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். ‘சிவப்புக் கலரில்’ ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.

அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.

சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். “யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?”

“நான் தான்ங்க. ஏன்?” அப்பாவியாக விசாரித்தான் இவன்.

“யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!”

அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது.

“எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!” என்று நெகிழ்ந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button