இந்தியாவில் வேகமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் அதாவது மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 82 பேர் உயிரிழந்தனர்.

தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “சண்டிபுரா வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது,” என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் ஒவ்வொரு 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள், பூச்சி வகைகளால் சண்டிபுரா வைரஸ் பரவுகிறது.

இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து என எதுவும் இல்லை. பாதிப்பு ஏற்பட்டதும் அதனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அதற்கு ஏற்ப நோய் பாதிப்பை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, 15 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button