ஜனாதிபதிப் போட்டியிலிருந்து ரணில் விலகினால் பலரும் விலகுவர்
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வதற்கும் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும் பலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமையை சமீப கால அரசியல் தாவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருப்பதாக தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாவதாக தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தொடர்ச்சியாக பின்னிலையிலேயே இருக்கின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலைமையின் காரணமாக பலர் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாகவும் கூட்டணி அமைத்தும் செயற்படுவதுடன் பல அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துக்குள் உள்வாங்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இதுவரை நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. அவர் போட்டியிலிருந்து விலகினால் அவருக்கு ஆதரவு தெரிவுக்கும் பலரும் அங்கிருந்து விலகிச் செல்லும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது இரண்டு அணிகளாக பிளவடைந்துள்ளதாலும் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுடன் பலர் முரண்பட்டுள்ளதாலும் பலரின் தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்குடன் பலரும் இணைந்து கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.
![]()