ஆஸ்திரேலிய நடவடிக்கையை எதிர்த்து வழக்காட சிங்டெல் உறுதி

சிங்டெல்லின் ஆஸ்திரேலிய நிறுவனமான ஓப்டஸில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் தொடர்பு, ஊடக ஆணையம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையை தான் தற்காத்து வாதாடப் போவதாக சிங்டெல் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14ஆம் தேதி) அன்று தனக்குத் தெரிந்து 10,200 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமே இணையத் தாக்குதல் காரணமாக இணையத்தில் வெளிவந்ததாகத் தெரிவித்தது.

இதற்கு நேர்மாறாக, ஆஸ்திரேலிய ஆணையம் அந்நாட்டின் தொலைத்தொடர்பு (இடைமறிப்பு, நுழைவுரிமை) சட்டத்தின்கீழ் 3.6 மில்லியன் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த ஓப்டஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய ஊடக கண்காணிப்புத் துறையின் நடவடிக்கைகளால் எழக்கூடிய அபராதத்தின் அளவை தன்னால் மதிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

“முடிவில் இதை ஆஸ்திரேலிய கூட்டரசு நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

“விதிமீறல் நடந்துள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்தால், நீதிமன்றம் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற நிகழ்வுகளுக்கு எற்ப அபராதத் தொகையை நிர்ணயிக்கும். அந்தத் தொகை எத்தனை விதிமீறல்கள் இடம் பெற்றன என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது,” என்று ஓப்டஸ் விளக்கியது.

மேலும், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இணையத் தாக்குதலைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்க காவல் துறையுடனும் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக ஓப்டஸ் நிறுவனம் தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button