நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு தி.மு.க.,வுக்கு எதிரான ஆட்டமா?…
நடிகர் விஜய் மக்கள் இயக்கம், சமூக பணிகளை தொடர்ந்து, சமீபகாலமாக அரசியல் ரீதியான விஷயங்களையும் செய்து வருகிறது. அதன் துவக்கமாக, சமீபத்தில் அம்பத்கேர் பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
அதை வரவேற்றுள்ள, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், ‘அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல், அரசியல் செய்ய முடியாத சூழல் உருவாகி விட்டது. நடிகர் விஜய், தன் ரசிகர்களுக்கு அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட கட்டளை இட்டிருப்பதை பாராட்டுகிறேன்’ என, கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில், ‘விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ‘தலித் மக்களை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கம் இயங்குகிறது’ என்றார்.
இதற்கிடையில், ‘இப்தார்’ நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, ஏழை முஸ்லிம்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு, தன் மன்றத்தினருக்கு விஜய் அடுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் நடத்திய,சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாதிரியார்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க.,வின் ஆதார பலமாக உள்ள தலித், சிறுபான்மையினரை குறிவைத்து, நடிகர் விஜய் இயங்கத் துவங்கியிருப்பது, ஆளும் கட்சி வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடு தான், தலித் கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் என்கிறது, விஜய் வட்டாரம்.
![]()