போர் பயங்கரம்; கழிவறை கிண்ணங்களை கூட திருடி சென்ற ரஷிய வீரர்கள்: உக்ரைன் பெண் மந்திரி குற்றச்சாட்டு

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் ஆரம்பித்ததில் இருந்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியிலான முயற்சிகள் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்றும் அமைதிக்கான எந்தவொரு முயற்சியிலும் பங்காற்ற இந்தியா தயார் என்றும் பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.

பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.

எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் முதல் வெளியுறவு துறை துணை மந்திரியான எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக கடந்த 10-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தந்த அவரை டெல்லியில் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகளுக்கான செயலாளர் சஞ்சய் வர்மா சந்தித்து பேசினார். அவரது இந்த பயணத்தில், வெளியுறவு துறை இணை மந்திரி மீனாட்சி லேகியை சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வரும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த போரில் ரஷிய வீரர்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றியும் தபரோவா குறிப்பிட்டார். ரஷிய வீரர்கள் அவர்களுடைய, மனைவி, தாயாருடன் பேசிய உரையாடல்களை நாங்கள் இடைமறித்து கேட்டோம்.

அதில், உக்ரைனில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பல பொருட்களை திருடினோம் என அவர்கள் கூறினர். அதிலும், கழிவறை கிண்ணங்களை கூட அவர்கள் திருடி உள்ளனர் என உரையாடலில் இருந்து தெரிய வந்து உள்ளது என தபரோவா கூறியுள்ளார்.

உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான தலைவர் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் ஆகியவை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தபரோவா, சர்வதேச விவகாரங்கள் மற்றும் சவால்களை, பொருளாதார, எரிசக்தி மற்றும் அணு ஆயுத சவால்களை பற்றி இந்தியா பெரிய அளவில் விவாதிக்கும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார். தி மாஸ்கோ டைம்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தியொன்றில், உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷிய வீரர்கள், போர் தொடங்கிய முதல் 3 மாத காலத்தில், திருடிய 58 மெட்ரிக் டன் பொருட்களை தங்களது வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button