விளையாட்டாகக் கப்பல் கொள்கலனில் ஒளிந்துகொண்ட சிறுவன்… 6 நாள்களுக்குப் பிறகு வேறு நாட்டில்…
கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டே கப்பல் கொள்கலனுக்குள் தூங்கிய சிறுவன் 6 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டான்.
ஆனால் அந்த15 வயதுச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது 2,000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில்.
சம்பவம் பங்களாதேஷின் சிட்டாகோங்கில் (Chittagong) இம்மாதம் (ஜனவரி 2023) 11ஆம் தேதி நடந்தது.
நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கப்பல் கொள்கலனுக்குள் சென்றுள்ளான்.
உடல் அசதியால் அப்படியே தூங்கிவிட்டான்.
ஒருவாரம் கழித்து கடந்த 17ஆம் தேதி உடல் பலவீனமான நிலையில் அச்சிறுவன் மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் மீட்கப்பட்டான்.
ஃபஹிம் (Fahim) எனும் அச்சிறுவனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவன் மலேசியாவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அதன் பிறகு அவனது உடல்நிலை சீரானது.
சம்பவத்தை மலேசியாவின் கடல்துறைக் காவற்படை, குடிநுழைவுத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் ஆள்கடத்தல் செய்யப்பட்டிருக்கலாம் என்றுதான் மலேசிய அதிகாரிகள் முதலில் நினைத்தனர்.
எனினும் பின்னர்தான் சிறுவனைப் பற்றிய முழுக்கதையும் தெரிந்தது.
சிறுவனை அவனுடைய சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
![]()