ஒரு பதிவு!….. ஏலையா க.முருகதாசன்.

கதைகளை வாசிப்பதில்,நாடகங்களை பார்ப்பதில்,நடனங்ளை இரசிப்பதில், இசையை பாடல்களை கேட்டு இரசிப்பதில், திரைப்படங்களை, தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து இரசிப்பதில் என ஒவ்வொருவரின் இரசனையும் உள்வாங்கலும் வேறு வேறாக இருக்கும்.
ஒருவர் வாசித்து மகிழ்ந்து விதந்துரைக்கும் கதைகளை இன்னொருவர் கவனத்தில்கூட எடுக்கமாட்டார்.கதைகளின் மீதான அவர் விரும்பமும் உருசியும் வேறாக இருக்கும்.
உணவு வகைகளில்கூட ஒவ்வொருவர் விருப்பமும் ஒன்றாக இருப்பதில்லை.சிலருக்கு சில உணவுகளைப் பிடிக்கும், சிலருக்கு சில உணவுகளை பிடிக்காது.
அது போன்றதுதான் கலைகளின் வெளிப்பாடு மீதான நாட்டமும் இரசித்தலும் எல்லொருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.கலைகள் என்ற பொதுச் சொல்லுக்குள் நாடகம், நடனம், நாட்டியம்,இசைகள், பாடல்கள்,திரைப்பாடங்கள்,தொலைக்காட்சி நாடகங்கள் அடங்கிவிடுகின்றன.இவற்றில் பாடல்கள் இசையோடு கலந்து வெளிப்படும் போது அதற்கு கலை அடையாளம் கொடுக்கப்படுகின்றது.இவ்விரண்டையும் பிரித்தும் சேர்த்தும்கூட தனித்தனியாக ஆய்வுக் கட்டரைகளை எழுதலாம்.
என்னைப் பொறுத்தவரை எல்லாவிதமான விசயங்களையும் உள்ளடக்கிய எல்லாப்; புத்தகங்களையும் வாசிப்பேன். ஐயையோ இதையெல்லாம் வாசிக்கக்கூடாது என்று எனக்கு நானே வேலி போட்டுக் கொள்வதில்லை.கலைகள் மீதான நாட்டமும் அப்படித்தான்.
நான் இருபக்கமம் கண்களை மறைக்க வைத்து ஓடம் குதிரையாக இருக்க விருப்பமில்லை.நாற்திசையும் பார்த்தபடி புழுதி கிளப்பி ஓடும் குதிரையாக இருப்பவன்.
திரைப்படங்கள் வலைத்தளத்தில் நிறையப் பார்ப்பேன், வசதி கிடைத்தால் தியேட்டரிலும் பார்ப்பேன். எனக்கு விருப்பமான சின்னத்திரை நாடகங்களை பார்ப்பேன்.
நீயா நானா,தமிழா தமிழா ஆகிய கருத்தாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பேன்.என்னைக் கவராத உள்ளீடுகள் இக்கருத்தாடல் கருவாக இருப்பின் பார்ப்பதை இடையில் நிறுத்திவிடுவேன்.
இப்பொழுது சீ தொலைக்காட்சியில் தன்சானியா காட்டுக்குள் சேர்வைவர் என்ற காட்டு வாழ்க்கையை காட்டும் ஒரு நிகழ்வினை ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை நான் ஆர்வமாக பார்த்து வருகிறேன்.இந்தியா தமிழகத்திலிருந்து ஆண் பெண் என 16 போட்டியாளர்களை தன்சானியா நாட்டின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஜின்சிபார் தீவிற்கு கூட்:டிச் சென்று அவர்களை இரு பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவிற்கு காடர்கள் என்றும் மற்றதுக்கு வேடர்கள் என்றும் பெயர்கள் சூட்டி அவர்களிடையே போட்டிகள் வைத்து, போட்டிகளில் தோற்றவர்களை ஒவ்வொருவராக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இறுதியில் இப்போட்டிகள் எல்லாவற்றிலும் தாக்குப் பிடித்து வெல்லும் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படவிருக்கின்றது.
இந்நிகழ்வை வழிநடத்திச் செல்பவராக நடிகர் அர்யூன் செயல்படுகிறார்.
இதைவிட மூன்றாவது உலகம் என்ற ஒரு பகுதிக்குள் தற்காலிக தோல்வியாளர்களை இருக்கச் செய்கிறார்கள்.
இரு பகுதியினருக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் கடுமையானதாக இருக்கின்றன.வெற்றியாளர்கள் எவரென அவரவர் உடல்வலுவையும் அறிவாற்றலையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் பிக்பொஸ் நிகழ்ச்சியையும் பார்த்து வருபவன்தான் நான், எனினும் சேர்வைவர் நிகழ்ச்சி ஒரு படி மேலே இருப்பதாகவே கருதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்றில் இது போன்று அவுஸ்திரேலியாக் காட்டுக்குள் சிலரைக் கூட்டிச் சென்று போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளரை தெரிவு செய்தமையும் உண்டு.
என் பார்வையிலும் என் விருப்பத்திலும் பிக்பொஸ் நிகழ்ச்சியைவிட சேர்வைவர் நிகழ்ச்சி என்னை ஏன் கவர்ந்தது என்றால் கிட்டத்தட்ட மனிதன் தோன்றிய போது அவன் எப்படி காட்டு வாழ்க்கையை வாழ்ந்தானோ எப்படி உணவுக்காக வேட்டையாடி வாழ்ந்தானோ என்பதற்கு உதாரணமாக இந்த இரு பிரிவினரும் எவ்வித அடிப்படை வசதியுமின்றி அந்த வாழ்க்கை போன்று இல்லாவிடினும் உப்புத்தண்ணிக் கடலில் குளித்து ஒரு ஒழுங்கற்ற பாத்திரங்களில் சமைத்து, வேப்பத் தடிகளால் பல்லுத் தீட்டி குறிப்பாக ஆண்கள் தாடி மீசை மழித்தல் இல்லாமல், ஆண்களும் பெண்களும் தரமான உடைகளற்று காட்டு வாசிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் அவ்வாறு வாழத் தொடங்கி அதற்கு பழக்கப்பட்டும் விட்டனர்.
இன்றைய புறநாகரீக அடையாளங்களுடன் வாழும் மனிதன் வெறும் உணவு,வெட்பதட்பத்திலிருந்து தன்னை காத்துக் கொள்ள ஏதோ ஒரு உடை, படுக்க ஏதோ ஒரு ஓலை கிடைத்தால் போதும் என்ற நிiலைகூட வாழ்க்கைதான் என்பதையும் இந்நிகழ்ச்சி சொல்லி வருகின்றது.
இந்தப் போட்டியாளர்கள் இந்த வாழ்க்கையில் இசைவாக்கம் பெற்றுவிட்டனர், அந்த வாழ்க்கையை இரசிக்கவும் தொடங்கிவிட்டனர்.
![]()